பக்கம்:சுயம்வரம்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சுயம்வரம்

“கலியாணம் செய்துகொள்ளாத முட்டாள் அல்ல; புத்திசாலி! ஏன் தெரியுமா? எனக்கு இந்தக் கட்டுப்பாடே பிடிக்காது. அரிசிக்கும் சர்க்கரைக்கும்தான் கட்டுப்பாடு; அதனால் அவற்றுக்குக் கட்டுப்பாடு. இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன தட்டுப்பாடு? தட்டுப்பாடு இல்லாத அவர்களுக்கும் அவர்களுடைய காதலுக்கும் ஏன் இந்தக் கட்டுப்பாடு?”

“காதலுக்குக் கட்டுப்பாடா! அது என்னப்பா, அது?”

“அட, கலியாணத்தையும் சேர்த்துத்தான்டா சொல்கிறேன் அதற்குப் பின் அவளும் சரி, அவனும் சரி, வேறு யாரையும் அவ்வளவு சுதந்திரமாக் காதலிக்க முடிவதில்லையல்லவா?”

“ஐ ஸீ, அதற்காகத்தான் நீ கலியாணம் செய்து கொள்ளாமலே இருக்கிறாயா?”

“வேறு எதற்காக, பிரதர்? அரிசிக்கும் சர்க்கரைக்கும் உள்ள கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால் அவை கிடைப்பதும் தண்ணீர் பட்ட பாடாயிருக்கும், அவற்றின் விலையும் தண்ணீர் பட்ட பாடாயிருக்கும் என்று நம் வணிகப் பெருமக்களில் சிலர் சொல்லவில்லையா? அந்தப் பெருமக்களைப் பின்பற்றி இந்தப் பெருமகனும் சொல்கிறேன் - கலியாணத்தை நீக்கிப் பார்க்கட்டும்; ‘காதலினால் அது உண்டாம், இது உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே!’ என்று எந்தக் கவிஞனும் பாடாமலேயே இந்த நாட்டில் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதா இல்லையா, பார்!”

“இப்போது மட்டும் என்ன, அது குறைந்தா போய் விட்டது? உன்னைப் போன்ற புண்ணியவான்கள் இருக்கும் வரை காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதோ இல்லையோ, கண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/79&oldid=1384756" இலிருந்து மீள்விக்கப்பட்டது