பக்கம்:சுயம்வரம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சுயம்வரம்


அவர்களும் என் 'பாலிசி'யைப் பின்பற்றுகிறவர்கள்தான். ஏதாவது ஒரு டாக்சியைக் கொண்டு போய் அவர்களுக்கு அருகே நிறுத்தி, 'கம் ஆன், கெட் இன்' என்றால் போதும்; 'தாங்க் யூ!' என்று இனிய குரலில் இனிக்க இனிக்கச் சொல்லிக்கொண்டே ஏறிக் கொள்வார்கள். ஏதாவது ஒரு ஓட்டல் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 'இரவு முழுவதும் நீங்கள் எங்களுடன் தங்க வேண்டும்' என்றால் போதும்; அப்படியே தங்குவார்கள். பொழுது விடிந்ததும் இருபத்தைந்தோ, ஐம்பதோ கையில் கொடுத்தால் போதும்; அழகான புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். அதற்குப் பின் நமக்கும் அவர்களுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது; உபத்திரவமும் கிடையாது. அந்த மாதிரி வாழ்க்கையை நீயும் அனுபவி ராஜா அனுபவி!"

மாதவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

"எனக்கு வேண்டாம் ராஜா அந்த வாழ்க்கை, நீயே அனுபவி!"

"எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? நீ எங்கே இன்பத்தை அனுபவிக்கப் போகிறாய்? துன்பத்தைத் தான் அனுபவிக்கப் போகிறாய். அதிலும், ஒருத்தியா காதலிக்கிறாள் உன்னை? மதனா காதலிக்கிறாள்; அருணா காதலிக்கிறாள்; நீலா காதலிக்கிறாள். மதனாவின் காதல் கலியாணத்தில் முடிந்து, இப்போது கண்ணீரில் நிற்கிறது. மற்ற இருவரின் காதல்களும் எதில் முடிந்து, எப்படி நிற்கப் போகின்றனவோ? போ, மதனா உனக்காக அங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாள்; போ பிரதர், போ! போய், நீயும் அவளுடன் சேர்ந்து அழு! அதற்குத்தான்டா நீ லாயக்கு!" என்று அவன் மாதவனைப் பிடித்துத் தள்ள, "எங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாள்?" என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/83&oldid=1384758" இலிருந்து மீள்விக்கப்பட்டது