பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“ஏன் சாதம் பத்தாமல் குக்கர் வச்சிருக்கியா? அப்ப ஆகட்டும், சேர்ந்து சாப்பிடுவோம்?”

"ஒ...இல்லடீ!”

கிரி சொல்லு முன் ரத்னா சமையலறைக்குச் சென்று பார்க்கிறாள். மடிச் சமையல், பாத்திரங்கள், குழம்பு, ரசம். எல்லாவற்றையும் திறந்து பார்க்கிறாள். பிறகு அவளே ஏதோ ஒரு தட்டைக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தக் கையுடன் குளிரலமாரியைத் திறந்து, குளிர்ந்த நீர்ப் பாட்டிலை எடுத்து மேசைமீது வைக்கிறாள். ஊறுகாய்கள்.... தயிர்...

“ஹாய், இது என்ன ஊறுகாய் கிரி?”

“ஸ்விட் நெல்லிக்காய். நீ உட்காரு, நான் பரிமாறுவேன்.”

“நத்திங் டுயிங். ஏன் என்னுடன் சாப்பிடக்கூடாதா? இவக்கா எவனையோ கட்டிண்டா, நீ சாப்பிடக் கூடாதுன்னு மாமியார் சொன்னாளா?”

உண்மையில் இவள் வருகையில் தனது பல நாளைய வெறுப்பும் பொருந்தாமையும் ஓர் எல்லைக்கு வந்து விடுமோ என்று கிரி இப்போது அஞ்சுகிறாள்.

“உனக்கென்ன பிடிவாதம்?...அந்த அழுக்குச் சமையல் அறையில் கீழ உட்கார்ந்து, எல்லோருக்கும் எல்லாம் வைத்து விட்டு மிச்சம் மீதியைக் கொட்டிக் கொண்டு சாப்பிட, நீ நாலு கால் இனமா? நீ எதற்காக எம். ஏ. பி, எட். பண்ணி, எட்டு வருஷம் வேலையும் பண்ணினே? அந்த கிரிஜா எங்கே போனாள்? இந்த மொட்டைக் கிழத்துக்கு ஏன் இப்படிப் பயப்படனும? உனக்குச் சிந்திக்கும் அறிவு இல்லே? ஓ...கமான் கிரி...?”

இப்படி அவளிடம் யாராவது ஒரு நாள் பரிவு காட்டி இருக்கிறார்கள்? பெற்ற பெண் குழந்தைகள், கணவன், மாமியார்-?