பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10

செந்தமிழ் பெட்டகம்


'வேட்கைப் பத்து', 'அன்னாய்ப் பத்து' முதலியன சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியவை.

இத் தொகையைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்றும், தொகுப்பித்தார் யானைக் கட்சேய் மாந்தஞ் சேரலிரும் பொறையார் என்றும், நூலிறுதியில் உள்ள பழங் குறிப்பினால் தெரிய வருகின்றன.

இந் நூலின் செய்யுள்-தொகை 599, 129, 130- ஆம் செய்யுட்கள் பிரதிகளில் காணப்பெறாது மறைந்து போயின. 416, 490- ஆம் செய்யுட்களின் இரண்டாம் அடிகளில் சீர்கள் குறைந்து காண்கின்றன. ஒவ்வொரு பாடலின் கீழும் கொடுக்கப் பெற்றிருக்கும் கருத்துகள் பழமையானவையே. சில பிரதிகளில் மட்டும் காணப் பெற்ற மிகைப் பாடல்கள் நூலின் இறுதியில் பின் இணைப்பாகத் தரப்பெற்றுள்ளன.

இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. இது பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ அமையாது, உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள், முதலியவற்றை நன்கு விளக்கி, சிற்சில இடங்களில் மட்டும் திரிசொற்களின் பொருளையும் புலப்படுத்திச் செல்லுகின்றது. ஒரு சில இடங்களில் இலக்கணக் குறிப்பும், சொல் முடிபு பொருள் முடிபுகளும் விளக்கப் பெற்றுள்ளன. இந்தப் பழைய உரை 469-ஆம் செய்யுள் வரையில்தான் இப்பொழுது கிடைத்துள்ளது: இடையிடையே சில பாடல்களுக்கும் இவ் உரை இல்லை.

அருமையாக அமைந்த சிறந்த இந்தப் பழைய உரை நூல் முழுமைக்கும் கிடைக்காமற் போனது ஒரு பெருங் குறையே. இந்த உரையை இயற்றிய ஆசிரியரைப் பற்றி யாதொன்றும் அறியக் கூடவில்லை. ஆயினும், இவரது உரைப் போக்கிலிருந்து பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், முதலிய உரையாசிரியர்களை ஒத்த பெருமை உடையவர் என்று திண்ணமாகக் கூறலாம்.