பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

133


கொலை செய்கிறான். பின் துருவதேவிக்குச் சந்திர குப்தன்பால் காதல் ஏற்பட , அரண்மனையிலிருந்து தப்பி ஊரில் ஒளிந்திருக்கும்படி ஆகிறது. பின் பைத்தியக்காரன்போல் கோலங் கொண்டு, அரண்மனைக்குட் புகுந்து, முடிவில் அண்ணனைக் கொலை செய்து, துருவ தேவியை மணந்துகொண்ட சாகசாங்க மன்னனாகிறான். இக்கதையின் போக்கைத் தாங்கும் வேறு சில சான்றுகளும் அகப்பட்டிருப்பதால் இந்தப் பிரகரணம் நாடகமாயும் வரலாற்றாதாரமாயும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

பவபூதி மகாகவி எழுதிய மூன்று நாடகங்களுள் இரண்டு இராமாயணத்தைப் பற்றியவை; ஒன்று சமூக நாடகம், மாலதி மாதவம் என்று பெயர் கொண்டது. இதில் மாலதி மாதவர்களுக்குள்ள காதல் சிறப்புறக் கூறப்பெறுகிறது. மாலதியைத் தகப்பன் அரசனுடைய விருப்பத்திற்கேற்ப நந்தனனென்பானுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கிறான். கமாந்தகி முதலிய அன்பரின் உதவியால் இந்த இடையூறு மட்டுமன்றி வேறு தடைகளையும் கொடிய தீங்குகளையும் தாண்டி, இறுதியில் காதலரிருவரும் மணக்கின்றனர். இதில் மாலதியைச் சாமுண்டிக்குப் பலி கொடுப்பதற்காகச் சில வாமமார்க்க உபாசகர்கள் முயலுவதும், அத்தீங்கிலிருந்து சாமுண்டி கோயிலிருக்கம் மயானத்திற்கு வந்த மாதவன் அவளை விடுவிப்பதுமான ஐந்தாவதான மயான அங்கம் ஏக்கம், உருத்திரம், பயானகம், பீபத்ஸம், வீரம் முதலிய பல சுவை கொண்டு ததும்புவதோடு, நடையிலும் சிறந்தமைந்திருக்கிறது.

தேவி சந்திரகுப்தம் போன்றதாகிய, இதுகாறும் சுவடிகளில் அகப்படாமல்,மேற்கோள்களிலிருந்தே விவரமாய்த் தெரிய வரும் மற்றொரு சிறந்த பிரகரணம் புஷ்ப தூஷிதகம் என்று பிரமயசஸ் ஸ்வாமி என்பவர் எழுதியது. இதில் தன் மைந்தன் ஊரிலில்லாத போது ஏதோ தப்பாய்ச் சில சந்தர்ப்பங்களைக் கவனித்த தகப்பன் தன் மருமகளின் தடத்தையைத் தவறாய்