பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

செந்தமிழ் பெட்டகம்


கட்டுரைகள் வரைந்துள்ளார். செல்வ கேசவராய முதலியார் கம்பர் முதலான கட்டுரைகள் எழுதியுள்ளார். விநோத ரச மஞ்சரி என்ற நூலிலும் பல கட்டுரைகள் உள்ளன. 'கலா நிலையம்’ என்ற இதழில் டி.என். சேஷாசலம் ஐயர் பல நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார் பல சிறந்த கட்டுரைகளின் ஆசிரியர். சுப்பிரமணிய பாரதியார் சிறந்த கட்டுரைகள் பல எழுதியுள்ளார். வ.வே.சு ஐயர், மறைமலை அடிகள், உ.வே. சாமிநாதைய்ர், கதிரேசஞ் செட்டியர், வேங்கடசாமி நாட்டார், கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலிய பெரியார்களும் கட்டுரை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினர்.

இவற்றையடுத்து இந்நாளில் உள்ள வார,மாத இதழ்களால் கட்டுரை வரைதல் மிகுதியும் விரிவடைந்துள்ளது. நல்ல முறையில் அது வளர்ந்துள்ளது. தற்காலத்தில், அரசியல், பொருளாதாரம், இலக்கிய ஆராய்ச்சி, விஞ்ஞானம் ஆகிய பல துறைகளில் கட்டுரைகள் நிறைய எழுதப்பெறுகின்றன.

ஆங்கில கட்டுரை :

ஆங்கிலம் உரைநடை இலக்கியங்களை நிறையப் பெற்றிருக்கின்ற மொழி. ஆங்கில உரைநடை நூல்கள் வளர்வதற்கு உறுதுணையாயிருந்தவை பெருவாரியாகத் தோன்றிய அம்மொழிக் கட்டுரைகளேயாம். இதனால் கட்டுரையின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது ஆங்கிலமே என்று கருதி விடக்கூடாது. ஏனெனில் முதன் முதலில் கட்டுரை தோன்றியது பிரெஞ்சு மொழியில் தான். ஆங்கிலத்தில் வழங்கும் எஸ்ஸே என்ற சொல் ‘எஸை' என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்தே தோன்றியது. இது முயற்சி எனப் பொருள்படும். இச்சொல் நாளடைவில் வளர்ச்சி பெற்று,ஆங்கிலத்தில் உரை நடையில் அமைந்த இலக்கியக் கட்டுரைக்குப் பெயராயிற்று.