பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

செந்தமிழ் பெட்டகம்


சியைக் கூடக் கவனிக்காமல் கல்வி வளர்ச்சியிலேயே கவலையாக இருந்தார். ஆனால் தந்தை எதிர்ப்பார்த்தது போல் பள்ளிப் படிப்பில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி காணப்படவில்லை. எனினும், ஏழாவது வயதிலேயே கவிதை புனையும் திறமை உண்டாயிற்று பாரதியார் பதினோராவது வயதில் (1893-ல்) புலவர்கள் கூடிய சபையில் கொடுத்த ஈற்றடிகளைக் கொண்டு, கவிகளை விரைந்தியற்றிச் சபையினரை வியப்பித்தார் என்பர். அவர்கள் மகிழ்ந்து ‘பாரதியார்’ என்ற பட்டத்தை அளித்தனர். பதினைந்தாவது வயதில் (1897-ல்) இவருக்கு மணம் நடந்தபோது இப்பட்டம் அளிக்கப் பெற்றதாகக் கூறுவதும் உண்டு.

புரட்சிகரமான சீர்திருத்தக் கொள்கைகளைப் பாடப் போகும் இக்கவிஞருக்கு 1897 ஆணித் திங்களில் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற ஏழு வயது சிறுமியைத் தந்தை மணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டில் தந்தையார் வறுமையில் மூழ்கி, மனம் இடிந்து மரணம் அடைந்தார்.

பிறகு பாரதியார் காசிக்குச் சென்று, அங்கிருந்த தம் அத்தையின் உதவியால் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து கற்றுப் பிரவேசத் தேர்வில் தேறினார். காசியில் படித்தபோது வடமொழியோடு இந்தியும் பயின்றார். அரசியல் விஷயங்களில் ஊக்கமும் முதல் முதல் காசியில் ஏற்பட்டது.

1902-ல் இவர் எட்டையபுரத்திற்குத் திரும்பி வந்து. ஜமீந்தாரிடம் உத்தியோகத்தில் அமர்ந்தார். ஜமீந்தாரின் மாளிகைக்குப் போய் அவருக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்துக் காட்டுவதும், அங்கே வரும் பண்டிதர்களுடன் தமிழ் ஆராய்ச்சி செய்வதும் இவர் உத்தியோகம். இக்காலத்தில் ஷெல்லி, பைரன் முதலான ஆங்கிலக் கவிகளின் சுதந்திர வெறி இவரை வசீகரித்தது. ஒருநாள் ஜமீந்தார், ‘நரத்துதி செய்வதைக் கண்டித்