பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

121


இறைவனையும் ஒப்பக்காணும் ஞானக் கண்ணுமுடையராய், மக்கட்கு வேண்டிய அறிவு நூல்களும் பிறவும் ஆக்கித்தரும் பேரருள் உடைய பெரியோராவர் என்பது அறிஞர் முடிபு. இவர்தம் அறிவும் ஆற்றலும் ஏனையர்க்குள்ளனபோல்வன அல்ல. சுருங்கச் சொல்லின், மக்களுட் கற்றோரினும் சிறந்த கல்வியறிவும், ஒழுகலாறும் உடையோர் என்பது மிகையாகாது. ஆகவே, முனிவர் பெருமக்கள் நம்மனோர்க்கு அறிவுகொளுத்து மாற்றால் உரைப்பனவே பொருண்மொழியென்பது அறிஞர் கொள்ளும் கொள்கையாயிற்று.

இப்பொருண்மொழி விழுமிய பொருளைத் தன்னகத்தே கொண்டு பெருகியும், சுருங்கியும் வருதல் நம் நூல்களிற் காணலாம். சுருங்கி வருதலே பெரும்பான்மையெனினும், சுருங்கியே வருதல் வேண்டுமென்ற வரையறையின்மையால் பெருகியும் வருதல் இயல்பாயிற்று. இவை எத்துணைச் சுருக்கமாயிருக்கின்றனவோ அத்துணையும் பொருட் பெருக்கமுடையவாதல் கண்கூடு. எடுத்துக்காட்டாக, திருக்குறள் ஒன்றே யமையும். சின்மென் மொழியால் விழுமியபொருளைத் தன்னகத்தே யுடைத்தாய் ஒவ்வொரு திருக்குறளும் அமைந்தி, ருத்தலும், தொட்டனைத் தூறும் மணற்கேணியைப் போலக் கற்றனைத்துறும் பொருளாழமுடைமை சிறத்தலும் கொண்டு பொருண்மொழியாதலில் எவ்வகையினும் முற்பட்டிருக்கின்றது. இத்திருக்குறளை ஒரு பெரியோர் “கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்றனர் என்ப. இவ்வியல்பே பொருண்மொழிக்கண் இருத்தல் வேண்டு மென்பது ஆங்கிலப் பெரியோர்களின் முடிபுமாகும். பொருண் மொழிக்கண் வரும் பொருள் தத்தம் மனத்தின்கண் முளைத்துத் தோன்றிய பழுத்த எண்ணங்களாகவும், பரந்த உலகில் நிலவும் பொருள்களைப் புலமையாற் கண்டு ஆராய்ந்து தெளிந்த முடிபுகளாகவும் இருத்தல் வேண்டுமென்பதும், அவை ஒரு சில சொற்களாலாகிய சொற்றொடர்களாயிருத்தல் வேண்டு மென்பதும், அவை யாராயும் தோறும் பயன்தருவனவாயிருத்தல் வேண்டுமென்பதும் பொருண்மொழியியல்புகளை யாராயும் ஆங்கிலப் புலவர்களின் கொள்கை. சுருங்கச் சொல்லின்,