பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

செம்மொழிப் புதையல்



எம்மொழியில் எழுதவிரும்புகின்றனரோ அம்மொழியில் - இயன்றவாறு பிழையின்றி விளங்க எழுதுதல் வேண்டும். சொற்றொடர்களில் இலக்கண வழுக்கள் அமைந்திருத்தல் ஒருபுடை நிற்ப, "ஒருவள்” முதலிய இலக்கண வரம்புகடந்த சொற்கள் பல விரவியிருத்தல் கற்பார்க்குக் கேடுபயக்கும் தன்மையதாகின்றது. நிற்க, உரை நூல்களிற் காணப்பெறும் பொருண்மொழிகள் எண்ணிறந்தனவாகலால் ஒருசிலகூறி இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்காகாது. புத்தகஞானமேயுடையவர்கள் விடயங்களை யாராயும்போது தமது சொந்த நிலையையிழந்து அப்புத்தக நிலையையே பெற்று ஆராய்வார்கள். ஒரு தேசத்தின் இயல்பினை அத் தேசத்திற்குச் சென்று திரும்பினோர் கூறக்கேட்ட அறிவு எவ்வாறு வலியுடையதாகுமோ அவ்வளவுவலியே புத்தகஞானமே யுடையோன் ஆராய்ச்சியிற்படும் பொருளுமாகும். புத்தகமே கற்றோன் காணும் பொருண்மை பல்லிழந்தோன் தன் வாயிலமைத்துக் கொள்ளும் போலிப் பல்லைப்போல் மனத்திற் பதிகிறது. தாமே தம்சொந்த அறிவினால் அறிந்ததோ இயல்பாகவேயமைந்த அவயவம் போல் மனத்தில் வலுப்பட்டு நிற்கிறது” - தி. செல்வக் கேசவராய முதலியார்.

“காமுகனாவானொருவன் ஒரு வனிதையிடத்து அன்புடை யன் என்பது அவள் ஒக்கலைக் கண்டுழி நிகழும் அன்பின் அளவு பற்றியே அறியப்படும்.” - சிவஞானயோகிகள்.

“மானமாவது தன்னிலைமையிற் றாழாமையும், தெய்வத்தாற் றாழ்வுவந்துழி உயிர்வாழாமையுமாம்."

"உயிர் நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அதுவே - பரிமேலழகர்"

சில ஆங்கிலப் பொருண்மொழிகள்:

1. நுண்ணறிவோர் இழைக்கும் தவறுகளும், அறிஞர் செய்யும் ஆரவாரமும், நல்லோர் பிழைக்கும் குற்றங்களும் ஆகிய இவையாவும் சேரநிகழ்வது கிளர்ச்சியே