பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

189


2. ஒரு பொருளின் விலையைச் சொல்லி வாங்கும்போது நாம் வாங்கும் விலை நேர்மையானதா? என்று காணவேண்டும். இஃது இரண்டாவது மந்திரம். நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும் மக்கள் மனத்தில் அருவருப்பை உண்டாக்கும்; அதனால் வாணிகம் தடைப் பட்டுச் சீரழியும்.

3. நாம் இப்படிச் சொல்லுவதாலும் செய்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா? என்று ஆய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம். நம்பிக்கையால் வாணிகம் பெருகும். நட்பினால் அது செழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றிச் சிறக்கும்.

4.நமது இந்தச் செய்கையால் எல்லோருக்கும் நன்மை விளையுமா? என்று நோக்குவது நான்காவது மந்திரம். பிறர்க்கு நன்மை செய்வது குறித்தே வாணிகத் தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருள்களை அவரவரும் தாமே தேடிக்கொள்வது எளிதில் நடக்கக்கூடியதன்று. ஒருவர் உண்டு பண்ண, உண்டு பண்ணிய பொருள்களை ஒருவர் ஒரிடத்தே கொண்டு சேர்த்துத் தொகுக்க, ஒருவர் அவற்றைப் பலருக்கும் வகுக்க, ஒருவர் எடுத்து விற்க, இப்படிப் பலரும் பலவகையில் உழைக்க வேண்டும். நமது செயலால் வாங்குபவரும் விளைவிப்பவரும் இடையில் பல நிலைகளில் வேலை செய்பவரும் யாவரும் நன்மை பெறவேண்டும். மேலும், தேவைப்பட்டு வாங்கு வோருள்ளும் ஏழை எளியவர், சிறியவர் முதியவர், தெரிந்தவர் தெரியாதவர் யாவரும் இதனால் நன்மையடைய வேண்டும். தேவைப்பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால் பெறுகின்ற மக்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் உண்டாகும். இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளைச் சிறந்த நிலையில் பெற்று அமைதியாகவும் இன்பமாகவும் மனநிறைவோடும் வாழுமாறு தன் செயலை