பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. ஆதனார்

சோழன் கரிகாலன், சோழன் கரிகாற் பெருவளத்தான் கரிகால் வளவன் என்றும் கூறப்படுவன். இவனைப் பாடிய சான்றோர்கள். சங்க இலக்கிய முதல் தல புராணங்கள் வரையில் மிகப் பலர் உள்ளனர். கரிகாலன் சங்க இலக்கிய காலத்தவனாதலால், அக் காலத்துச் சான்றோர்களையே இங்கே வரைந்து கொள்வோம்.

சங்க இலக்கியங்களிற் காணப்படும் சான்றோர்களில் சோழன் கரிகாலனைப் பாடியவர் எண்மராவர். அவர்கள் முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணானார் வெண்ணிக் குயத்தியார், கழாத் தலையார், நக்கீரர், மாமூலனார், பரணர், கருங்குழ லாதனார் என்போராவர்.

ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பொருநராற்றுப்படை பாடிச் சிறப்பித்துள்ளார். பொருநன் ஒருவன் சோழன் கரிகாலனிடம் சென்று, அவன் தந்த பெருஞ் செல்வத்தைப் பெற்று வருபவன், வேறொரு பொருநன் தன் எதிர் வரக் காண்கின்றான்; அவன் வறுமை மிகுந்து வாடியிருக்கின்றான்; அவனுக்குத் தான் கரிகாலனைக் கண்ட திறமும், கரிகாலன் பிறப்பு வரலாறும், கொடை நலமும், பிறவும் எடுத்தோதி, அவனையும் கரிகாலனிடம் சென்று வேண்டுவன பெற்று வறுமைப் பிணி நீங்குமாறு ஆற்றுப்படுத்துகின்றான்.

இதன்கண் கரிகாலன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் என்றும், இவன் பிறக்கும்போதே தந்தை இறந்ததனால் அரசுரிமையுடன் பிறந்தான் என்றும், இளமையிலே அரசு கட்டிலேறினானென்றும் ஆசிரியர் கூறுகின்றார்.

"இதனை. ... ... ... வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்,
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி