பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

239


சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே.”

என்று இயம்புகின்றார்.

இவ் வண்ணம் பொருந ராற்றுப்படையால் கரிகால் வளவனைச் சிறப்பிக்கும் முடத்தாமக் கண்ணியார் பெண்பால ரென்று கருதுவோரும் உண்டு, வெறி பாடிய காமக்கண்ணியார் போல, வளைந்து கிடக்கும் தாமத்தை முடத்தாமம் என்று பாடிய நலங்கண்டு சான்றோரால் முடத்தாமக் கண்ணியார் என வழங்கினர் போலும் என்றும் கூறுவர். இவர் பெயர் உறுப்பால் வந்த தென்றும், இவர் பெண்பாலா ரென்றும் கூறுவாரும் உளர். என்பர், திரு.உ.வே.சாமிநாதையர்.

இனி, ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலனைப் பட்டினப்பாலை யென்னும் பாட்டைப் பாடிச் சிறப்பித்தவர். இதன்கண், கரிகாலனுடைய மறம் வீங்கு பல் புகழும், அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும் விரித்துப் பாராட்டிக் கூறப்படுகின்றன. கரிகாலனை ஒருகால் அவன் பகைவர் ஒரு சூழ்ச்சியாற் கைப்பற்றிச் சிறை செய்து திண்ணிய காப்பும் காவலும் அமைத்திருந்தனர். ஆயினும், அவன், அவர் செய்த சூழ்ச்சியினும் மிக நுண்ணிய சூழ்ச்சி செய்து சிறைக்கோட்டத்தினின்றும் தப்பிச் சென்று, தன்னகரை யடைந்து, அரசுரிமை யெய்தினான் என்பது வரலாறு. இதனை உருத்திரங் கண்ணனார்,

‘... ... ...•கூருகிர்க்

கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப், பிறர்,
பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொண்று
பெருங்கை யானை பிடிபுக் கரங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான்.

என்று குறித்துள்ளார். பின்னர், அவன் தன்னை இவ் வண்ணம் சூழ்ச்சியாற் சிறை செய்த பகைவர் மேற்சென்று, அவருடைய