பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

265


மிகையாகாது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்றே உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசிவாழ்தல் எல்லோரும் செய் கடனாம்” என்றே மெய்ம்மைநெறியை உலகில் வற்புறுத்திய பெருநெறி இதற்கே உண்டு. எத்திறத்துமக்களையும் உயர்வு, தாழ்வு இன்றி ஒப்ப எண்ணியொழுக வேண்டும் என்ற உயர்நெறியில் ஒப்பற்ற சமயம் இசுலாம் சமயமே. கடவுளின் அருட்கண்ணின்முன் மக்கள் வேற்றுமையில்லை என்ற செந்நெறியை உலகில் நிறுவி, யாவரும் அதனைக் கடைப்பிடித் தொழுகச் செய்த முதற்பெருமை இதற்கே உண்டு.

இச்சமயம், பண்டைக் காலத்தில், கிறித்து பிறந்த சுமார் அறுநூறு யாண்டுகட்குப்பின், அரபிய நாட்டிற் பிறந்த மகமது என்ற பெருமகனாரால் முதன்முதலாகக் காணப்பெற்றது. அக்காலத்து, அவ்வரபிய நாட்டுமக்களிடையே பொருந்தாச் செய்கைகளும், திருத்தாக் கொள்கைகளும் பலவாய் மலிந்து, உருவ வழிபாட்டின் பெயரால், அந்நாட்டிற்குப் பேரிழிவினைச் செய்து வந்தன. அருள் வள்ளலாகிய இப்பெரியார் அவற்றைக் கண்டு உளம்பொறாது இச்சமயவுண்மையினைக் கண்டு, அம் மக்களை நல்வழியில் தெருட்டித் திருப்பவெண்ணினார். அவர் முயற்சி தொடக்கத்தில் அவரது அருமையுயிர்க்கே இன்னலை விளைவிக்கத் தொடங்கிற்று. அவர்கள் விளைத்த தீமையினைப் பொறாத அவர், முடிவில், அந்நாட்டின் சீரிய நகரங்களுள் ஒன்றாகிய மெக்கா நகரைவிட்டு நீங்கி மெதினா என்னும் நகருக்குச் சென்றார். அதற்குள் அந்நாட்டவருட்பலர், அவர் தெருட்டியசமயக் கொள்கையை மேற்கொண்டு, அவர் காட்டிய நெறியில் ஒழுகத்தலைப்பட்டனர். அவர்கட்குமகமதியர் என்றும், அப்புதிய சமயத்திற்கு மகமதிய சமயம் என்றும் பெயர்கள் முறையே வழங்கலாயின. மெக்காவை நீங்கி, அவர், மெதினாவுக்குச் சென்ற நிகழ்ச்சி, இன்னும். இஜிரா என்று வழங்குகிறது. அவர் வழங்கிய அருமை மொழிகள், “குர்ஆன்” என்னும் பெயருடைய அருமறையில் பொறிக்கப்பட்டிருக் கின்றன. மகமதியர்கள், அம்மொழிகள் பரம்பொருள், மகமது நபியின் வாய்வழியாக வழங்கியவை என்று கருதுகின்றனர். இந்துக்கள், தங்கள் நான்மறைகளை ஆண்டவனே அருளினான் என்றும், அதனால் அவனுக்கு "வேதங்கள் மொழிந்தபிரான்" எனப்பெயரும் கூறுபவராகலின், அவர்கட்கு இதன்கண் புதுமையொன்றும் தோன்றாது. "அருள்நெறி" யாகிய அச்சமயமும், அருள் நெறியை உணர்த்தும் இயல்பு பற்றிசெ-18