பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20. விஞ்ஞானமும் தத்துவஞானமும்


க்காலம் நுணுகிக் காணும் விஞ்ஞானத்துக்குச் சிறப்பளித்து அதனாற் பெறலாகும் அறிவியல் நலங்கட்கு முதன்மை தந்து நிலவும் காலமாகும். விஞ்ஞானத்தால் விளக்கப் படும் பொருள்களே உண்மை யெனவும், கொள்ளத்தகுவன எனவும் கருதுவது இக்காலத்தில் சிறப்பியல்பு. சிவமாகிய கடவுட் பொருள் விஞ்ஞான முறையில் காணப்பட்டாலொழியக் கொள்ளத்தகுவதன்றெனவும் இக்காலம் கருதுவதுண்டு. அறிவென்பதுகூட விஞ்ஞான முறையிற் பெறுவதுதான் சிறப்பு என்று இக்காலத்தவர் கருதுகின்றனர். இவர்கட்கு முன்னணியில் நிற்பவர் இமானுவேல் காண்டு (Immanuel Kant) என்பாரும், அகஸ்தே காந்தே (Augustine Conte) என்பவருமாவர். இவ்விருவரும் தத்தங்கொள்கை வகையில் பெரிதும் வேறுபாடு உடையவராயினும் "அறிவாவது விஞ்ஞான முறையிற் பெறப்படும் அறிவே” என்ற வகையில் ஒத்துள்ளனர். விஞ்ஞான முறை அறிவாவது நியூட்டன் (Newton) கண்ட அறிவியல் முறைப்படி அறியவேண்டியவற்றை அறிவதாகும். உலகியற் பொருளொன்றை விஞ்ஞான முறையில் அறிவதென்பது, குறித்த பொருளின்பால் பிற பொருட்குள்ள தொடர்புகளைக் கணக்கியல் வாய்பாட்டாற் கண்டறிவதென்பர். சிவமாகிய செம்பொருள் உலகியற் பொருள்களுள் ஒன்றாக வைத்து விஞ்ஞான முறையிற் காணக்கூடியது அன்மையின் அச்செம் பொருள் அறியக் கூடியதன்று; ஆகவே, அதனைப்பற்றிப் பேசுவது வீண் செயல் என்பது அவர் கொள்கை. ஆயினும், உலகியல் நிகழ்ச்சிக்கு அத்தகைய செம்பொருளொன்று உளதாக வைத்துச் செய்வன செய்யவேண்டியிருக்கிறது எனவும், எனவே, அது நம்மால்


The Unity of Philosophical Experience by E. Gilson, P.III. pp.223–95.

தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமையுரையின் ஒரு பகுதி.