பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

45


சால்பெனப் பெரியோர் கூறுவர். அவர் வழி நிற்றல் கற்பவை கற்பதின் அழகு. ஆதலின், நின்மாட்டு எய்திய துன்பம் யாது?

“கடல்பாடவிந்து தோணி நீங்கி
நெடுநீ ரிருங்கழி கடுமீன் கலிப்பினும்.”

இயன்றன செய்தற் கிடையேன். கூறுக” என்றது.

இக்கூற்று பூச்சின் செவிப்புலம்புக்கதும், அது ஒருவாறு மனந்தேறி, “பைந்தழை வாழ்க்கை பரித்தோய்! ஆவியோ நிலையிற் கலங்கியது. அது என் யாக்கையின் அகத்ததோ புறத்ததோ அறியேன். இந்நிலையில் இறைவன் எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யருளியுள்ளான். அவற்றையும் அறிவிலியாய யான் இம் முருக்கிலையிலிட்டுள்ளேன். அவற்றை எனக்குப்பின் களைகணாய் நின்று புரப்பார் ஒருவரையும் காணாது மறுகுகின்றேன். இவற்றையருளிய இறைவர்க்கு அளித்தல் கூடும் என்பது உறுதியே எனினும், என் உள்ளந் தடுமாறுகின்றது. ஆகலின், உற்றாரின்றி யுயங்கும் என் முன் ஒருதனித்தோன்றிய நீயே களைகனாய் நிற்பாய் கொல்! அங்ஙனம் நிற்றல் உனக்கு அரிதன்றன்றே. அன்றியும், ஆவி துறக்கும் நிலையிலிருக்கும் என்னுடைய இப்புல்லிய வேண்டுகோளை மறாது ஏற்றருள்க. இது நினக்குப் பேரறமாகும்,” என்றது.

புழு:- ஆம். பேரறமே. ஆயினும் இவற்றை யான் புரத்தல் யாங்ஙனம்? இவையும் என் இனத்தைச் சார்ந்தன வல்லவே!

பூச்சி:- சாராமையால் வரும் குற்றமொன்றுமில்லை. யான் கூறும் உணவை மட்டில் நீ அருத்தியொடு அளித்துவரின், ஒருவகை இடையூறும் நேராது. இது முற்றும் உண்மை.

புழு:- அற்றேல், உரைத்தருள். நின் உடல் நிலையும் குன்றி வருகின்றது. காலம் தாழ்த்தற்க.

பூச்சி:- கூறுவல், செடிகளின் இளந்தளிரும் பனிநீரும் தாம் அவற்றிற்குத் தக்க உணவாம். வேறு எவையேனும் அளிக்கப்பெறின், அவை உண்ணாது இறந்துபடும். ஆகலின் இக்கூறிய உணவை...யே...அ...

என்று கூறிக்கொண்டே உயிரை விடுகின்றது.