பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. வரனென்னும் வைப்பு

டம்பொடு கலந்து தோன்றும் உயிர்த்தொகையுட் சிறப்புடையவென உயர்ந்தோரான் உணர்த்தப்பெறும் மக்களுயிர்க்கு உறுதிப்பொருளெனப் பெரியோர் வகுத்துக் கூறும் நால்வகைப் பொருள்களுள் வீடென்பதும் ஒன்று. அது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து எனப் பெரியோர் கூறுவர். கூறினும், அது இவ்வுலகம் போல் அழிதன்மாலைத்தாய இன்பத்தினைத் தராது, எஞ்ஞான்றும் குன்றா வின்பம் தரும் பேருலகமெனவும், அதனை நாடியே உயிர்கள் நிற்றல் வேண்டுமெனவும் நம் ஆன்றோர் கூறுவதனோடு அமையாது, அவ்வுலகநாட்டம் உயிர்கட்கு இயற்கையிலே அமைந்துளதென்றும், அது, ஆயும் உணர்வுடையார்க்கே புலனாமென்றும் கூறினர்; கூறுகின்றனர். அக்கூற்றினை ஒருவாறு ஆராய்ந்து கண்ட வழியே, ஈண்டுக் கூறப்பெறுகின்றது.

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து, சவியுறத் தெளிந்து, தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கான்யா றொன்றின் அடைகரையின்கண், வெயினுழைபறியாக் குயினுழை பொதும்ப ரொன்றிருந்தது. அதன் கண் எண்ணிறந்த புள்ளினம், மண்ணுறு வாழ்க்கைக்கு மாண்புறுத்தும் செவிச்சுவையமுதம் கேட்போர் செவிப்புலம் வளம் பெற அளித்து வாழ்தர, அவ்வினத்து ளொன்றாய இன்னிசைச் செம்புளொன்று பெடையுடன் கிளைமல்க அவ் வடைசினைப் பொதும்பருள், பெற்றதுகொண்டு, பேரறம் நேர்ந்து, பெறலரும் இன்பமே துய்த்து வந்தது. அதனால், அது, எங்கெழிலென் ஞாயிறு என்னும் - இறைவனருளா லெய்தும் -


  • இதனைச் செம்பகம் என்றும் வழங்குப.