பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

71


பாடுங்கால், அவ் விசைப்பொருள் முறையிற் சிறிது பிறழ்தலும் குறைதலுமாயின. இழுக்குடைய பாட்டாயினும், இசை நன்றாயின்மை கொண்டு பேருவகை மீதுரத் தாமும், தம் அன்னையொப்ப, மெல்லிசை மிழற்றல் தொடங்கின. இங்ஙனம் குரவராயினார் செய்யும் செய்வினையை மக்களாயினார், நுணுகி நோக்கி, அம்முறையே செய்தல் உயிர்த்தொகையுட் சிறந்து விளங்கும் இயல்புகள் பலவினுளொன்று. இதுவே, ஏனையறிவுவளர்ச்சிக்கும் பிறவற்றிற்கும் ஒருதலையாக வமைந்த அடிப்படை யென்பது கல்வியாளர் கோள். இதனை யீண்டுரைப்பிற் பெருகும்.

வெள்ளி முளைத்தது; விடியல் வந்தது; பறவை பாடின; பல்லுயிரும் பரவுக்கடன் செய்தன; விழுந்த ஞாயிறும் எழுந்தது; மென்காற்று வீசலுற்றது; பூநான்கும் பொதுளி வெறி திசை நான்கும் போய்உலவ, சுரும்பு தோைர்ந்தன. சேக்கையுளுறங்கிக் கிடந்த செம்புட்குஞ்சுகள், உறக்க நீங்கி, ஒருபுடை வந்து, உவகை கூர்ந்தன. அதுபோது, தாய்ப்புள், தன் செல்வச் சிறு குஞ்சுகளின் மருங்கமர்ந்து, தன் மெல்லிசையைத் தொடுத்து, யாற்றுநீர்ச்செலவின்மேற் பாடிற்று. அக்காலை கரையாக் கல்லும் புல்லும் கனிந்துருகின. சுருங்கக்கூறின், அவ்விசை யின்பத்தால்,

   “மருவியகால் விசைத்தசையா; மரங்கள்மலர்ச் சினைசலியா;
   கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்தோடா;
   பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்ந்தொழியப் புனல்சோரா;
   இருவிசும்பின் இடைமுழங்கா; எழுகடலும் இடைதுளும்பா.”

எனுந் தீங்கவியே அமையும். -

இங்ஙனம் சிறந்தோங்கிய இசையொன்றில், அப் புள் வீறுற்றதே யொழிய, அதனுளத்தில், சிறுகுஞ்சு வினவிய பொருள்மாத்திரம் புலனாயிற்றன்று. ஆயினும் தானும் தன்பார்ப்புக்களும் ஒருபகல் அவ்வாறு செல்லிடம் சேறல் வேண்டு மென்னும் திப்பிய வுணர்வொன்று அதன் நெஞ்சத் தகலாது நிலவுவதாயிற்று. இவ்வாறு நாட்கள் பல சென்றன. அப்புள்ளும் யாற்றுநீர்ச்செலவு பொருளாகப் பாடி வந்தமையை நீக்கிப் பிறிதோர் இடமொன்றனை நாடிப் பாடுதல் தொடங்கிற்று. அக்காலை அவ்விடமே, இவ்வாறு