பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

85


தித்திக்கும் தன்மையிற் சிறந்தது. இஃதுண்டாதற்குக் காரணம், என்னையெனின், அவை உண்மை யறிந்தன; அவ்வுண்மையையுணர்ந்தன; அவ்வுண்மையை உறுதி யெனவும் கொண்டன. ஆகலாற்றான், அவை ஆண்டை யின்பத்தையும் ஈண்டேயுணரலாயின.

நிற்க, ஒருநாள், சிறுகுஞ்சுகள் குடம்பையினின்றும் வெளிச் சென்றிருப்ப, அவற்றின் உளங் கலங்குதற் கேதுவாய பேரொலியொன்று அருகே யெழுந்தது. எழ, பேரச்சங்கொண்டு, அவை தம் கூடடைந்தன. கூடு அக்காலை, நிலைகுலைந்து, தளர்ந்து, நீரால் நனைப்புண் டிருந்தது. இருப்பினும், அவை, ஒன்றை யொன்றிறுகப்புல்லிச் சிறிது போது கிடப்ப, ஆய்ப்புள் இல்லாமை தெரிந்தது. எதிர் நோக்கிய கண்கள் பூத்துப்போயின; மனம் பெருந்துயர் பூண்டது. என் செய்யும்!

பின்னர் அவை, கூட்டினின்றும் வெளிப்போந்து, நோக்கு மிடந்தொறும் தம் தாய்ப்பறவையைத் தேடிச்சென்று, தளர்வும், களைப்பும் மீதுர, ஈன்றாரைக் காணாது ஏக்குற்ற நெஞ்சம் துயர்ந்து சாம்ப, காண்டல் கூடுமோ கூடாதோ என்னும் எண்ணம் ஒருபுடை யலைப்ப, பெரும்பேதுற்றகாலை சேறும் நீரும் கலந்து சிறிய நீர்நிலையும், சுற்று மோங்குத லில்லாப் புதலும் உள்ளதோர் துன்பநிலையம் அவற்றின் முன்னர்த் தோன்றிற்று. கூர்ந்து நோக்கியகாலத்து, பறவைச் சிறகும் சிறுமயிரும் சாம்பிய வோசையும் ஆண்டுத் தோன்றின. கண்ட குஞ்சுகள். வேணவா மீக்கொள, அங்குச் சென்று, இறந்த தொன்றும், இறக்கப் போவதொன்றுமாய இரண்டு புட்களைக் கண்டு, இறக்கப்போவது தம் யாயாதல் உணர்ந்து, பட்டதை என் கூறுவது படுவதைக் கண்ட தாய்ப்பறவை, செல்வங்காள் "எழுமின் சென்மின்| திருவருளின் காரியமாய உள்ளொலி உந்தம் உளத்தும் இன்னே எழுந்திசைக்கின்றது. சென்மின் சென்மின் பணிமின் படருமின் தாழ்த்தற்குச் சிறிது போதும் இன்று! இன்பநாட்டமே கொண்மின்!!" என்றது. எனக்கேட்ட குறும் புட்குழாம், "என்னை? எந்தை யாண்டுளார்! ஐயகோ! அன்னாய்! அன்னாய்!” என்று அலறிக் கூயின. "அமைமின்! அமைமின்! யாங்கள் ஆண்டு உம்மோடு சூழ விருத்தல் முடியாது; கூடாது. இனி..." என்று கூறிக்கொண்டே தன் தலையைக் கீழே சாய்த்து, வரனென்னும் வைப்பில் முளைத்தது.