வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணதெய்த இரு தலையுமெய்தும் என்னும் செம்பொருளுணர்ந்து, அந்நடுவணதாய பொருளீட்டல் கருதித் திரைகடல்வழியும், மைவரைவழியும் பல நாடுகளுக்குச் செல்லும் மக்கள் உளராதல்போல, சிற்றுயிர்களுள் தேன் தேடிப்பலதிசைகளுக்குஞ் செல்வன பலவுள. அவற்றிற்குத் தேன் எனவும், அளியெனவும், வண்டெனவும், கரும்பெனவும் பலபெயர்கள் உண்டு. நிற்க, ஈண்டுத் தேன் தேடிச்சென்ற் வண்டொன்றின் வரலாற்றினையே யான் கூறத்தொடங்குகின்றேன்.
புதுத்தளிர் தோன்ற, பூக்கள் மலர, நறுமணம் எங்கும் நன்கு பரவ, மலையாநிலம் மருங்குவந்தசைய, யாண்டும் இன்பமே இலகித்தேனாறும் இளவேனிற்காலத்து முதுபகலொன்றின் பிற்பகலில், தேனியொன்று நறுந்தேன் வேண்டிக் காவும், சோலையும், கவின்பூந்துருத்தியும் புக்கு, ஆண்டாண்டு மலர்ந்து வயங்கும் பூத்தொறும் சென்று, கொளற்கரிய தேன் மிகைப்படக்கொண்டு, அதனாலெழுந்த உவகையால் விரைந்து எழுந்து, தன்கூடு நோக்கிச் செல்லத் தொடங்கிற்று. ஆயினும், அதுபோது, அது பூவியல் நறவம் மாந்திப் புந்தி மயக்குற்றிருந்தமையால், வழியறியாது மேலெழுந்து சென்று, அருகிருந்த ஒர் பேரகத்தின் மேற்சாளரத்தினுடே அதன் உட்புறம் அடைந்தது.
அக்காலை அப்பேரகத்தின்கண் ஏதோ ஒருசிறப்பு நடைபெற்றது: இனியவும் மணமிக்கவுமாய பண்டங்கள் பல மலிந்திருந்தன. மிகப்பலமக்களும் கூடியிருந்ததோடமையாது சொல்லாடலாலும், இசைக்கருவிகளாலும் பிறவற்றானும் பேரோசையும் செய்வாராயினர். இவற்றைக்கண்ட தேனீயின்