பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

செயலும் செயல் திறனும்



இவர்களுக்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதானாம். அஃது இவர்களுடைய வடிவந்தான். அஃதாவது மக்களைப் போன்ற வடிவம். மற்ற தன்மைகளெல்லாம் மரத்திற்கு உரிய தன்மைதான் என்று இக்குறளின் இரண்டாம் அடி அவர்களை மேலும் இழிவுப்படுத்துகிறது.

பறவைகள், விலங்குகள் முதலிய அனைத்தும் அவ்வவற்றின் பிறவிகளுக்கும், உயிர்த்தன்மை, உடல் தன்மைகளுக்கும் ஏற்ப ஊக்கமுடையனவாய் இருக்கின்றன; முயற்சியுடன் இயங்குகின்றன. எந்த ஒரு பறவையோ, அல்லது விலங்கோ, பிறிதொரு பறவையோ விலங்கோ ஈட்டிக் கொண்டு வந்து கொடுத்துத் தின்பதில்லை. நாம் கட்டிப் போட்டு வளர்க்கும் ஆடுமாடுகளும் கூண்டில் அடைத்து வளர்க்கும் கிளி, பூவை (மைநாகப்புள் - நாகணவாய்ப்புள், (அஃதாவது மைனா, முதலிய பறவைகளும் கூட, அவற்றைக் கட்டவிழித்தும், கூண்டைத் திறந்தும் வெளியே போக விடுவித்து விட்டால், அவை தத்தமக்குரிய உணவுப் பொருள்களைத் தாமே தேடிக் கொள்ளும் திறமை உடையன அன்றோ? ஈரறிவு உயிரியாகிய எறும்புகூட தனக்கு வேண்டிய உணவைத் தானே தேடிக் கொள்கிறது. ஆனால் உலகில் பல மக்கள், ஊக்கமற்றவர்களாக இருந்து பிறர் உழைப்பால்தானே வாழ்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருந்தால், அவர்களில் ஒருவர் அல்லது இருவர் உழைப்பில்தாமே மற்றவர்கள் உண்ண வேண்டியிருக்கிறது. இப்படி ஆட்டுக்குடும்பத்தில் பார்க்க முடியுமா? நாய்க் குடும்பத்தில் பார்க்க முடியுமா? குருவிக் குடும்பத்தில் பார்க்க முடியுமா? முடியவே முடியாது. அக்குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே அவரவர்களுக்குரிய உணவுக்காக அவரவர்களுமே ஊக்கமுடன் உழைக்கின்றனர். எனவே உழைப்பில் ஊக்கம் உறுதி. இல்லாதவர்களைப் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இணை வைத்துச் சொல்ல முடியாது.

இனி, ஓரறிவுள்ள மரம் போன்றவையும் தத்தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தம்வேர்களாலும், இலைகள் போன்றவற்றாலும் தேடிக் கொள்கின்றனவே என்றால், அஃது அவ்வாறில்லை. அவை அவ்வாறு உண்பதற்கு ஏற்றவாறு அருகில் நீர் இருத்தல் வேண்டும்; அல்லது யாரேனும் நீர் கொணர்ந்து ஊற்றவோ எருப்போடவோ வேண்டும். அல்லாக்கால் அவை பிழைத்திருக்க முடியாது. நீர் இல்லாமல் காய்ந்து விடும். காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களும் கூட நிலத்தடியில் நீரோட்டம் இல்லையானால் உயிர் வாழ முடியாது. எனவேதான் திருவள்ளுவப் பேராசான் உள்ள ஊக்கத்துடன் ஒடியாடித் தேடி உண்ண முடியாதவர்களை, உழைக்காதவர்களை மரம் என்கிறார்.

ஊக்கமே செல்வம், ஒருவன் பொருள் இல்லாதவனாக இருக்கலாம்.