பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. தாழாது உழைத்தல்

1. உழைப்பின் பெருமை

உழைப்பு, செயல், தொழில், தொண்டு, பணி ஆகிய சொற்கள் யாவும் உழவுத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சொற்களாகும். அவற்றுக்குரிய மூலங்கள் உழு, செய், தொள், பள் ஆகியனவாம். உழு-உழை செய் நிலம் செயல் தொள். தொளுதொடு தோண்டு; பள் - பள்ளம் பள்ளு - பண்ணு - பணி ஆகிய சொல் தோற்றங்களைக் கவனித்தால் அவை விளங்கும். இவை முதலில் மாந்தன் உழவையே முதல் தொழிலாகச் செய்தான் என்பதையும், அதைச் செய்தவன் தமிழனே என்பதையும் வரலாற்றடிப்படையில் உணர்த்தும். எனவே மாந்தனின் முதல் உழைப்பு உழவையே அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

நிலத்தை உழவு செய்து, பண்படுத்தி, விளைவு செய்வதற்கு நாம் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்குமோ அவ்வளவு உழைப்பை நாம் பிறவற்றிற்கும் தரவேண்டியிருக்கும். உலகில் எந்தச் செயலானாலும் சரி, அதற்கு உள்ள உறுதியையும், அறிவுழைப்பையும், உடல் உழைப்பையும் தந்தாக வேண்டும். உழைக்காமல் யாரும் உய்ய முடியாது. எனவே, அனைவருமே ஒவ்வொரு வகையில் உழைத்தாக வேண்டும். இனி, ஒரு குறிப்பிட்ட செயலுக்குக் குறிப்பிட்ட அளவு உழைப்பைத் தந்தாக வேண்டும். குறிப்பிட்ட அளவு உழைக்கவில்லை யானால், குறிப்பிட்ட அளவு பயனை எய்த முடியாது. எனவே, இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே உழைப்பு தேவை.

இனி, உழைப்பில்லா விட்டால், உடல் நலிவடைந்துவிடும்; உடல்கெடும், நோயுறும். உடல் நோயுற்றால், உள்ள உறுதியும் தளரும்; உள்ளம் தளர்வுற்றால், அறிவால் பயனிராது அறிவுணர்வும் கெடும். ஆகவே, உடலுழைப்பால்தான் உள்ளமும், அறிவும் உறதிப்படும். அதே போல் உள்ள உறுதியாலும், அறிவுறுதியாலும், உடலும் ஊக்கமுறும். இந்நிலைகளை முன்னரே விளக்கியுள்ளோம். இத்தலைப்பில் இவற்றை இன்னுங் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

2. இருவகை உழைப்பு

உழைப்பு இருவகைப்படும் அறிவுழைப்பு உடலுழைப்பு என்பன