பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

139



4. உடல் ஒரு பொறி (Working Machine)

உடல் ஒரு பொறியைப்போல் உள்ளது என்றாலும், உடல்போல் ஒரு பொறியை எங்கும் எவரும் செய்ய இயலாது. பொறிக்கும் உடலுக்கும் உள்ள எளிய ஒரு வேறு பாட்டை உணர்ந்தாலே, உடம்பின் பெருமையும் அருமையும் விளங்கிவிடும். நாம் காணுகின்ற எந்தப் பொறி (Machine)யிலும், ஒரு சிறு உறுப்பாகிய ஒரு திருகாணி இல்லையானாலும் அப்பொறி இயங்காது. ஆனால், இவ்வுடலில் பல உறுப்புகள் இல்லையானாலும், இஃது இயங்கும், அஃதாவது கால்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லையானாலும், அல்லது கைகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லையென்றாலும், அல்லது இரண்டு கண்கள் இல்லையென்றாலும், காதுகள் இல்லையென்றாலும், மூக்கோ வாயோ இல்லையென்றாலும் இவ்வுடல் இயங்கும் வல்லமை உடையது. இதைப்போல் ஒர் அரிய பொறி உலகில் எங்குமே இல்லை. இத்தகைய அரிய பொறியை நாம் இயற்கையால் தரப்பெற்றிருந்தும், இதைப் பேணிப் புரக்காமல் இருப்பது எத்துணை அறியாமை. இவ்வுடலில் உள்ள உறுப்புகளின் அருமையை நாம் அவ்வுறுப்புகள் இல்லாதபொழுதுதான் உணரமுடியும்.

5. பழுதுபடும் பொழுதுதான் பெருமை தெரியும்

காலை இழந்த பொழுதுதான், காலின் அருமை, தேவை நமக்கு விளங்குகிறது. கண்களை இழந்த பொழுதுதான், அக் கண்களின் பெருமையை நாம் உணர முடிகிறது. காதுகள் செவிடான பின்னர்தாம் காதுகள் நமக்கு எவ்வளவு இன்றியமையாத உறுப்புகள் என்பது நமக்குத் தெரிய வரும் பற்களை நாம் இழக்கின்ற பொழுதுதான், அடடா, நாம் பற்களைப் பாதுகாவாமல் போனோமே என்று அறிய முடிகிறது. உறுப்புகள் அனைத்தும் இருக்கின்றபொழுது, பேண முடியாத, பேண அறியாத நாம் அவற்றை இழந்துவிட்ட பின்னர், பெருந்துன்பம் அடைகின்றோம். அவற்றை முன்னதாகவே காக்கின்ற அறிவை நாம் பெறவில்லை யானால், நமக்கு அவை இருந்து என்னபயன்? நம் உடலும் அதிலுள்ள ஒவ்வோர் உறுப்பும், நம்முடைய ஒவ்வொரு பயனுக்காகவே இயற்கைத் தாயால் நமக்குத் தரப்பெற்றுள்ளது. இனி, அவற்றைக் காத்துக் கொள்ளும் அறிவையாகிலும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டாவா? உடலைக் காக்க அறியாதவன் உயிரையும் காத்துக் கொள்ள இயலாதவனாகப் போய் விடுகிறான் என்ற உண்மையை நாம் எப்பொழுதும் மறக்கவே கூடாது.

6. உடல், உள்ளத்திற்கும், உள்ளம், அறிவிற்கும் அடிப்படை

உடலைப் பேணிக் கொள்ளும்பொழுதுதான், மன ஊக்கத்தைக் காத்துக் கொள்கிறோம். உடல் நலமாகவும், உள்ளம் ஊக்கமாகவும்