பாவலரேறு பெருஞ்சித்திரனார்
161
வினையழுத்தங்கள், பணிச்சுமைகள், தொடர்ந்த தோல்வி, எதிரிகளின் மறைமுகமான எதிர்ப்புகள், பகைவர்களின் குறுக்கீடுகள், உடன் பணியாளர்கள் - தொழில் செய்பவர்களின் ஒத்துழைப்பின்மை அல்லது முரண்பாடுகள் குடும்பநிலைகள், பொருள் பற்றாமை, காலம், இடம் பொருந்தாமை, ஆட்சியாளரிடமிருந்து வரும் எதிர்ப்புகள், தாக்கங்கள் . முதலியவற்றால் ஒரு செயலில் ஈடுபடுபவரின், உள்ளம் தாக்கமுறுகிறது.
இவ்வகைத் தாக்கங்களில் ஒன்றோ இரண்டோ சிலவோ தொடர்ந்து வரும்போது, வினை செய்வார், மனச்சோர்வுறுவது இயற்கையாகவே அமைகிறது. இந்நிலைகளால் நாம் மனம் - உள்ளம் - சோர்வுற வேண்டியதில்லை. இவ்விடத்திலெல்லாம்,
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
(627)
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
(628)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
(629)
ஆகிய மூன்று குறட்பாக்களின் பொருளுரைகளை நன்கு எண்ணி, உள்ளத்தைச் சோர்வுற விடாமல், துக்கி நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
நாற்கதியிலும் உள்ள உடம்புகள், இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து, தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார் என்றும்,
'தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாமல், வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான், தன் முயற்சியால் துன்பமுறான்' என்றும்
'வினையால் தனக்கு இன்பம் வந்துழி, அதனை (உடலால்) நுகர்தலன்றி, மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்துழியும் அதனை (உடல் நுகர்தலன்றி, மனத்தான் வருந்தான்' என்றும்,
இம்மூன்று திருக்குறள் மெய்யுரைகளுக்கும், உரையாசிரியர் பரிமேலழகர் எழுதும் பொருளுரைகளைத் தெரிந்து தெளிந்து, உள்ளச் சோர்வைப் போக்கிக் கொள்ளுதல் இன்றியமையாதது.
2. உடல் இயக்கத்தைப் போலவே உள்ளத்தையும் இயக்கலாம்.
நம்மில் பெரும்பாலார் நாம் நம் உடலைப் பயிற்சியாலும், செயலாலும் இயக்குவதைப் போலவே, நம் உள்ளத்தையும் இயக்க முடியும் என்பதை அறிவதில்லை. உடல் பருப்பொருள்; உள்ளம் அதற்குள்ளிருந்து அடங்கி இயங்கும் நுண்பொருள்.