பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

195



வாழ்க்கையின் கடைசிப் பொழுது வரையில் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்.

அவற்றுள் ஒன்று, ஒருவன் தனக்குத் தான் மேற்கொண்ட நல்ல செயலில் பெரு நன்மை கிடைக்கவில்லையே என்றோ, வருவாய் வரவில்லையே என்றோ, வறுமை வந்துற்றதே என்றோ, பின்பற்றத் தகாதனவாகிய தீய செயல்களையோ, அல்லது வழிகளையோ, செய்தல் கூடாது. அவற்றில் ஒரு வகையான நலன் கிடைக்கின்றது என்பதற்காக, அவ்வாறு செய்வானாயின், பின்னர் அந்தச் செயலால் வரும் நன்மைகளையும் ஏற்கனவே அவனுக்கிருந்த பல நலன்களையும் சேர்த்து இழந்து போவான்' என்பார்.

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)

இக்குறளில் உலகில் தீயவை செய்யப்படுவனவெல்லாம் பெரும்பாலும் இல்லை என்னும் நிலையில் செய்யப் பெறுவனவே என்று உலகியல் பொதுவுண்மை சுட்டப்பெறுவதை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதற்கு, இல்லையே, வேறென்ன செய்வது என்பதே பெரும்பாலார் காரணம் காட்டுவதால், 'அவ்வாறான நிலையிலும் கூட தீயவை செய்யக்கூடாது; அவ்வாறு செய்தால் உள்ளதும் போய்விடும் என்கிறார். இவ்வுண்மையை ஏதோ மந்திர நோக்காக அவர் கூறவில்லை. மனவியல், உலகியல் அடிப்படையில் நிகழ்கின்ற செயல்களைக் கொண்டுதாம் கூறுகிறார் என்பதை உணர்தல் வேண்டும்.

எவ்வாறெனில், தீயவை செய்தாவது இல்லாமையை அல்லது வறுமையைப் போக்கவேண்டும் நலன்களைத் தேட வேண்டும் என்று எண்ணுபவர்கள், தீயவற்றால் இயல்பாகத் தொடக்கத்தில் வரும் நன்மைகளைக் கண்டு மேலும் கூடுதலான நன்மைகளை விரும்பி, மேன்மேலும் கூடுதலான தீமைகளில் ஈடுபட முயல்வார்கள். அக்கால் அவர்களின் தவறான செயல்கள் அண்டை அயலாராலும் ஆட்சியதிகாரிகளாலும் காவலர்களாலும் கண்டு கொள்ளப் பெறுதலும், அவர்கள் தீயவற்றால் வந்த நலன்களை மட்டுமே பிரித்துணராது, ஒட்டுமொத்தமாக, முன் நேர்மையில் வந்த நலன்களையும் பொருளீட்டங்களையும் தீமையிற் கொண்டனவாகவே கருதி, அவற்றையும் சேர்த்துக் குற்றப்படுத்தி அவற்றையும் ஒருங்கே கைப்பற்றிக் கொள்ளலும், உலகியல் நடைமுறையாகுமன்றோ? இவ்விளைவைப் 'பெயர்த்து என்னும் சொல்லால் உணர்த்தினார், உளவியலும்