பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22. ஒருவினை செய்பவர் துணை வருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபட விரும்புதல்

1. தேவைகள் ஆசைகள்

உயிர்களுக்குத் தேவை என்பது ஓர் இயற்கை நிலை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உடல் தேவை என்னும் ஒர் இயற்கை நிலையை மட்டுமே தம் முழு வாழ்வாக அமைத்துக் கொண்டுள்ளன. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும் சிறவாமல், உடல் தேவை மட்டுமே சிறப்பாய் அமைந்த ஐயறிவு உயிர்க் கூறுகளுக்கு அத்தேவையுணர்வின் நிறைவே அவற்றின் வாழ்வெல்லையாகும். உடலின் தேவைகள் உணர்வும், ஊறுணர்வும். எனவே, உணவுத் தேவையும் ஊறுணர்வு ஆகிய உயிர்ப்பெருக்க உணர்வுத் தேவையுமே பறவையினங்களின் விலங்கினங்களின் வாழ்வாக அமைந்து கிடக்கின்றன. உள்ள உணர்வுத் தேவையும் அறிவுணர்வுத் தேவையும் அறவே அவற்றுக்கில்லை. அஃதாவது உணவுத் தேரைக்காகவும் ஊறுணர்வுத் தேவைக்காகவும் அவற்றின் உடல்கள் இயங்குகின்றன. எனவே இரை தேடுவதும் உடல் இணைவுத் துணை தேடுவதுமே அவற்றிற்குப் போதுமான வாழ்வியல் உணர்வுகளாம். அவ்வுணர்வுகளின் தேவையை நிறைவு செய்வதே அவற்றுக்கான வாழ்க்கை முயற்சியர்கும்; அவற்றின் செயல் வெற்றியுமாகும்.

ஆனால், ஆறறிவு படைத்த மாந்தர்களுக்கு உடல் தேவையுடன் இன்னுஞ்சொன்னால் அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ள உணர்வும் அறிவுணர்வும் அவர்களின் கூடுதல் தேவைகளாக ஆகி, அவர்தம் வாழக்கையை மேலும் சிறப்புடையதாக ஆக்குகின்றன. உள்ளத்தின் தேவை ஆசையைப் பற்றி வளர்கிறது. அறிவுத்தேவை ஒரு நோக்கத்தை குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு தொடர்கிறது.

உள்ளத்தின் தேவை ஆசையாக முகிழ்த்து, அன்பாக மலர்ந்து, அருளாக மணந்து, ஈகமாக அஃதாவது தன்னை இழந்து கொண்டு கனிவும் நிறைவும் பெறுகிறது.

அறிவின் தேவை யாதாம் ஒரு குறிக்கோளாய்த் தோன்றி உழைப்பாய் உரம்பெற்று, உலகநலமாக மலர்ந்து தொண்டாக மணந்து, வீரமாக விளைந்து, செயற்கரிய செய்து புகழ்க் கனிவு பெறுகிறது.