பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

207



33. மன்னிக்கும் உணர்வு, 34. கஞ்சத் தனமின்மை, 35. கலையார்வம், 36. கணக்குத் திறம், 37 அழகுணர்வு, 38. எளிதில் இணங்கி வராத தன்மை, 39. சுவையுணர்வு, 40 எதிலும் அதிகப் பற்று வையாமை, 41. நினைவாற்றல் ஆகிய நாற்பத்தொரு திறன்களும் மிகக் கூர்மையாக அவர்களுக்கு இருக்கும். இவை ஏனோதானோ என்று வரையறுக்கப்பெற்ற உணர்வு நிலைகள் அல்ல. மனவியல், அறிவியல், தொழிலியல், இயல்பியல் முதலியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பெற்றவை என்க.

இவற்றுள் எத்தனை உணர்வு நிலைகள் குறைவாகவோ மிகுதியாகவோ உள்ளனவோ, அத்தனை அளவில் அவர்கள் செயல் திறன் மாறுபட்டதாக இருக்கும். எனவே, இவற்றுள் பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும். இவற்றுள் பெரும் பான்மையும் மாறுபட்ட உணர்வுடையவர்கள் கட்டாயம் தாம் ஈடுபடும் வினை உணர்வுகளில் ஒன்றியிருக்க இயலாது. அவர்கள் அரிமாவும் - வரிமாவும் போலவோ, மானும் ஆனும் போலவோ, குதிரையும் - கழுதையும் போலவோ, ஆடும் மாடும் போலவோ ஒன்றுபடாத தன்மை உடையவர்களாகவே இருப்பர்.

இவ்வுண்மையைச் சில எடுத்துக்காட்டு உணர்வுகளைப் பருப்பொருளாக மாற்றிக் காட்டி விளக்குவது எளிதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

4. திறனற்ற, திறனுள்ள இருவர் நிலை

மேலே கூறப்பெற்ற உணர்வுகளுள் அறிவுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள் எப்பொழுதும் எதையாவது அறிந்து கொள்வதில் துடிப்பாகவும், ஆர்வமுடையவர்களாகவும் இருப்பார்கள், அவ்வுணர்வு குறைந்தவர்கள் அவ்வாறி ல்லாமல், மந்தவுணர்வு உடையவர்களாக இருப்பர். இவ்விரு திறத்தாரும் ஒரு செயலில் துணைவர்களாக அமைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். இதில் முன்னவர் பின்னவரைத் தம் உணர்வு நிலைக்கு இழுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கும். பின்னவருக்கு அது சுமையாகவும், வெறுப்பை ஊட்டுவதாகவும் இருக்கும். எனவே, நீண்ட நாள்களுக்குப் பின்னவர் முன்னவருடன் ஒத்துப் போக இயலாமல் பின் தங்கிவிடுவார்.

இனி, இரண்டாவதாக, செயலறிவுடைய ஒருவர் அஃதில்லாமல் உள்ளவருடன் இணைந்து இயங்குவதாக வைத்துக் கொள்வோம். பின்னவர் முன்னவரை எதற்கெடுத்தாலும் எதிர்பார்த்துச் செயலில் ஈடுபட வேண்டியிருக்கும். அது முன்னவர் செயலாற்றலுக்குத் தடையாக இருக்கும். எனவே, முன்னவர் பின்னவரை நெடுநாள்களுக்குத் தம்முடன்