பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

செயலும் செயல் திறனும்



இவ்வுலகின் எல்லா வகைச் செயற்பாடுகளிலும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைத்தே இயங்க வேண்டியுள்ளது. சிலரிடம் கொள்ளும் இந்நம்பிக்கையால் நன்மையும், சிலரிடம் கொள்ளும் நம்பிக்கையால் தீமையும் நேரலாம். இவ்விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்து கொள்வது கடினம். ஏனெனில் ஒருவர் மனத்தை அதன் உணர்வு நிலைகளை இன்னொருவர் முன்கூட்டியே சரியாக மதிப்பிட்டு அறிந்து கொள்ளுதல் இயலாது. அவற்றைப் பழகியே அறிதல் இயலும். அப்பழக்கத் தொடர்புக்கு முன் அவரொடு கொள்ளும் தொடக்க ஈடுபாட்டுக்கு அவரை நம்பவும் செய்தல் வேண்டும்; நம்பாமலும் இருத்தல் வேண்டும். அவரை முழுமையாக நம்பி விடுவதும், முழுமையாக நம்பாமலிருப்பதும் பின்வரும் பழக்கத் தொடர்புக்கு வாய்ப்பு அமையவும் அமையாலிருக்கவும் செய்து விடலாம். எனவே படிக்கட்டுகளில் நடப்பது போல், அடுத்துள்ள படிக்கட்டில் ஒருகால் வைத்து ஏறியே, அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொரு கால் வைப்பதான ஒரு முயற்சியாக இஃது இருக்க வேண்டும். முதலில் இரண்டு கால்களையும் ஒரு சேரவே அடுத்த படியில் வைக்காமல், இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது நம்பாமையையும், படி உறுதி என்று தெரிந்தபின் அடுத்த காலையும் எடுத்துவைப்பது நம்பிக்கையையும் குறிக்கும்.

இவ்வாறு மாறி மாறி நம்பிக்கையுடனும், நம்பாமையுடனும் செயலுறவில் ஒருவரிடம் பழகுதல் வேண்டும் படிக்கட்டுகளையெல்லாம் தாண்டிக் கடந்து ஒருவர் மேல் உள்ள சமதளத்துக்கு வந்துவிட்ட பின், இரண்டு கால்களையும் பாவ விடுவதுபோல், இருநிலை உணர்வுகளையும் தாண்டி அஃதாவது பழக்கக் காலத்தைத் தாண்டி முற்றும் நம்பிக்கை நிலையையோ முற்றும் நம்பாமை நிலயையோ ஒருவர் பெறுவது இயல்பாக ஆகிவிடும் என்க.

இனி செயல்கள் பலவகைப்பட்டனவாக இருப்பதால், அவற்றுக்குத் துணையாளர்களும், பணியாளர்களும் அவ்வவ் வகைச் செயல்களுக்கேற்பப் பலவகைப்பட்டவர்களாகவே இருப்பர்; இருத்தலும் வேண்டும்.

எனவே, மேலே கூறப்பெற்ற அனைத்து உணர்வுக் கூறுகளிலும் நாம் மேற்கண்ட செயல்களுக்கு மிகவும் தேவையான, அல்லது பொருந்துவதான உணர்வுக் கூறுகளைக் கொண்டவர்களையே நாம் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.