பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

செயலும் செயல் திறனும்



10. இக்கால் உள்ள நாட்டு நிலை

படித்த இளைஞர்கள் பலர் உடலை வளைத்து அல்லது வருத்திச் செய்யும் வினைகளை வெறுக்கின்ற மனப்பான்மை உடையவர்களாக வளர்ந்து வருகின்றார்கள். அறிவுநிலைகளைப் பற்றிய உடல் உழைப்பற்ற மேலோட்டமான வினைகளில் மட்டுமே அவர்கள் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. இத்தகைய மனப்போக்கு நாகரிக ஆரவாரங்களிலும் மிகு சோம்பலிலுமே அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த நிலை மேலும் வளர்ந்தால், நாட்டில் ஏமாற்று, பொய், வஞ்சகம், சூழ்ச்சி முதலிய மனவுணர்வுகளும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, தற்கொலை முதலிய வினையுணர்வுகளுமே மேம்பட்டு விஞ்சி வளர்ந்து, மாந்த இன மீமிசை அறிவு வளர்ச்சி நிலைகளையே பொருளற்ற கூறுகளாக ஆக்கிவிடும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இப்பொழுதுள்ள நாட்டு நிலையும் இம்முடிவுக்கு ஒரு தொடக்கமாக உள்ள ஓர் ஏத நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளது.

11. நம் கடமை

எனவே இளைஞர்களின் மனவுணர்வு அத்தகைய தீயவுணர்வுகளில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காப்பது நிறைமாந்த உணர்வுடைய ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. அக்கடமையுள் ஒரு சிறு முயற்சியாகவே இக்கட்டுரைக் கருத்துகள் வைக்கப் பெறுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுவதும் கொள்ளாததும் இளைய தலைமுறையினர் தம் மனவுணர்களின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தனவாகும். இனி, செய்திக்கு வருவோம்.