பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

செயலும் செயல் திறனும்




2. அறிந்து செய்தல்

இனி, ஒரு தொழிலை அறிந்து செய்பவர்க்கு அல்லால் பிறர்க்கு அவ்வினை ஏவப்படுதல் கூடாது, என்பது கவனிக்கத் தக்கது.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

(515)

எனவே, அறிந்து செய்தல் ஒரு வினைக்குச் சிறந்த திறனாகும். வினையறியாதவரை, நம்மிடத்து அன்புடையவர் என்பதற்காக ஒரு வினையில் அமர்த்துதல் கூடாது. நாமும் வினையறிவு பெறாமல் அதனை மேற்கொள்ளுதலும் கூடாது. ஒரு வினை பற்றிய நூலறிவோடு செயலறிவும் நமக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். செய்வினை, செய்வான், செயல் முறை - குறள் (677) என்று படிப்படியாக நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.


3. தெளிவு பெறுதல்

ஒரு வினையைப் பற்றிய நூலறிவும் செய்முறை யறிவுந்தாம் ஒரு வினையில் நம்மைத் தெளிவுடையவர்களாக்கும். தெளிவு பெறாமல் வினை செய்வது எங்ஙன்? தெளிவு பெறாமல் செய்வது வினையில் தவறுகளை உண்டாக்கும்; அதனால் இழப்புகள் ஏற்படும். எனவே வினைத் தவறுக்காகவும் அதன்வழி ஏற்படும் இழப்புகளுக்காகவும் அஞ்சுகிறவர்கள், முதலில் வினையில் ஒருவகைத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

தெளிவி வதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

(464)

என்பார் திருவள்ளுவர். இந்தத் தெளிவு நூலறிவாலும், செயல் முறையறிவாலும் பெற வேண்டுவதாகும்.

ஒரு சவளி வாணிகத்தில் ஈடுபட விரும்புகிறவன் துணி மணிகள் பற்றிய அறிவையும், அவை மலிவாகக் கிடைக்குமிடங்கள், விலை கூடி விற்குமிடங்கள், அவற்றை விற்கும் காலம், அவற்றினைத் தேக்கி வைக்கும் காலம், பல வகையிலும் அவ் வாணிக வகையில் ஏற்படும் செலவுகள், வருகின்ற ஊதியம் இவற்றையெல்லாம் தெளிவுபட உணராமல் அவ் வாணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?