பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

செயலும் செயல் திறனும்



கொள்கைகளுக்காக, பலவேறு தேவைகளின் பொருட்டு, நண்பர்கள் ஆனவர்களாகவே இருப்பர். அவர்களெல்லாரும் சூழல்கள் மாறும்பொழுது, கொள்கைகள் வலிவடையும் பொழுது, அல்லது துன்பம் நேரும்பொழுது, தேவைகள் நிறைவு பெற்றவுடன், அல்லது நிறைவு பெறாது என்று தோன்றியவுடன், நட்பில் தளர்ந்து அல்லது விலகி அல்லது பகையாகிப் போய்விடுவார்கள். அரசியல் காரணமாக, கொள்கைகள் காரணமாக, அல்லது கட்சிகள் காரணமாக, பொருள் காரணமாக, அல்லது கலைகள் தொடர்பாக, அல்லது குடும்ப ஈடுபாடு அடிப்படையில், தொழிலடிப்படையில் நட்பு வைத்த பெரும்பாலார்களின் நிலை இப்படியே. அன்புமுறையாக நட்பு வைத்தவர்களே பிற எக்காரணங்கள் தொடர்பாகவும் விட்டு விலகாமல், கை நெகிழ்த்துக் கொள்ளாமல் என்றும் இருப்பர். இவற்றுள் எதிலும் தொடர்பில்லாமல் அறிவு அடிப்படையில் நட்புச் செய்வோரும் உண்டு. அவர்களுக்கிடையிலும் நாளடைவில் இருவர் உள்ளங்களையும் இறுகச் செய்யும் அன்பு தோன்றாவிடில் பிளவு ஏற்படுவது உறுதியே. அறிவு மட்டுமே ஒரு நட்புக்குக் காரணமாக இருந்து விடுவது இயலாது. அறிவு வேறுபாட்டுணர்வுகளை வளர்க்கக் கூடிய ஒருணர்வு பகுத்தாய்கின்ற தன்மையது அது. எனவே அறிவொன்றே காரணமாக நட்பு வைப்பவர்களின் தொடர்பு விரைவில் பிளவுப்பட்டுப் போக வாய்ப்பேற்படும். அந்நிலைகளிலெல்லாம் அன்புணர்வைத் துணையாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாதவர்களிடம் பகையுணர்வு கூடக் கால்கொள்ளும். பகை பின்னர் கடும் பகையாக மாறி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் மனப்பான்மையைக் கூடத் தோற்றுவித்து விடும்.

7. நட்பின் சிறப்பு

உண்மையான நட்பு என்பது உயிரொடு கலந்த அன்புணர்வால் தோன்றுவது. அது பல பிறவித் தொடர்புடையது. உலகில் உள்ள எல்லாத் தரப்பினருக்கும் நட்பு அடிப்படையானது. தேவையானது. நட்புச் செய்யாத மாந்தன் ஒருவனும் இருக்க முடியாது. ஒருவன் அரசனாயிருக்கலாம். அமைச்சனாய் இருக்கலாம். தொழிலாளியாக விருக்கலாம். படை வீரனாய் இருக்கலாம். அதிகாரியாக விருக்கலாம். இன்னும் ஏழையாக, பணக்காரனாக, கலைஞனாக, உழவனாக, திருடனாக ஒழுக்கமில்லாதவனாக, இன்னும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நண்பனில்லாதவனாக இருத்தல் முடியாது. இவ்வுலகில் உள்ள எல்லாருக்குமே நண்பர்கள் இருந்தாக வேண்டும். மக்கள் அனைவர்க்குமே நட்புணர்வு பொதுவானது. ஆகவே, நட்பைப் பற்றி அனைவரும் விரிவாக, நுட்பமாக, கட்டாயமாகச் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டே ஆகல் வேண்டும். எனவேதான்,