பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

59



அழிக்கும் தன்மையுடையது. அக்கால், அவன் அவ்வினைப் போராட்டத்தில் சிக்கி அழியாமல் இருக்க வேண்டுமானால், அடுத்தவன் கைப்பொருளை நம்பி இருத்தல் கூடாது. வினைக்கிடையில் எழும் போராட்டம், வினைத் தடை, கருவித்தடை, வினைஞர் தடை, காலத்தடை, இடத்தடை என்னும் ஐந்து கரணியங்களால் தோன்றும். இவ்வனைத்துத் தடைகளையும் பொருளால் நீக்கவியலும்.

யானைகளுக்கிடையில் நடக்கும் போரை அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பவனுக்கு வரும் இடையூறுகளும் பலவாகும். போரிடும் யானைகளுக்குள் ஒன்று, அருகில் நிற்பவனை நோக்கித் தாக்க வருவது; இரண்டு, அவை ஒன்றின் மேல் ஒன்று தாக்குவதற்கு எடுத்து வீசும் அல்லது முரித்து வீசும் கற்கள், அல்லது மரக்கிளைகள் நம்மேல் வந்துபடுவது; மூன்று போரிடும் யானைகளின் பிளிறல்களைக் கேட்டு, அக்கம் பக்கத்திலுள்ள யானைகள் அவற்றின் உதவிக்கு வரும்பொழுது, வழியில் வேடிக்கை பார்ப்பவருக்குத் தீங்கு தருவது முதலியன. இத்தகைய கேடுகளினின்று நீங்கியும், தீமை வருமோ என்று அச்சம் இல்லாமலும், நாம் யானைகளின் போரைப் பார்த்து மகிழ வேண்டுமானால், அருகில் உள்ள உயரமான ஒரு குன்றின் மேல் ஏறி நின்று பார்த்தல் வேண்டும் என்றும், அப்பொழுதுதான் போரிடும் யானைகளாலோ, பிறவகையிலோ நமக்குத் தொல்லை வராது என்றும், அதுபோல், வினை செய்பவன் வினைக்கிடையில் வரும் முன் கூறப்பெற்ற வினைத்தடை முதலிய துன்பங்களால் தான் தொல்லையுறாது தப்ப வேண்டுமானால், தன்கையில் உள்ள பொருளையே நம்ப வேண்டும். துணையாகக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவர் திருவாய்மொழி. அயலான் கையிலுள்ள பொருள், அத்துன்பங்களை உடனுக்குடன் நீக்கப் பயன்படாது என்பது அவர் குறிப்பு. இன்னும், அவர், யானைப் போரைக் கண்டு களிக்க விரும்புவான், ஒரு மலையின் மேல் ஏறிப் பார்ப்பதுபோல் என்று கூறுவதால், தன் கையில் உள்ள செல்வம் பெரிய அளவினதாக இருத்தல் வேண்டும் என்பதில்லை. சிறிய அளவினதாக இருப்பினும் தன் ஆளுகைக்கு உரிய உடைமையாக இருக்க வேண்டும் என்ற நுட்பமும் புலப்படுகின்றது. நாளை இன்னொருவனிடம் கேட்டுப் பெறும் கடனைக் கொண்டு இன்று நேர்ந்த வினைக் கேட்டை நீக்க எண்ணினோமாயின், இன்று நடக்க வேண்டிய வினை கெட்டுப் போகும். அதனால் இழப்பு நேரும் என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அதனால் வினையே அழிய நேரினும் நேரலாம் என்பன போன்ற, இத்துணைக் கருத்துகளையும் கொண்ட குறள் இது.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

(758)