பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

63



(Bench) யைச் செய்ய, ஒரு மிசை (Table)யைச் செய்ய, ஒரு பேழையைச் செய்ய, ஒரு வீட்டைக் கட்ட, ஒரு கப்பலைக் கட்ட ஒர் அணைக்கட்டைக் கட்ட நமக்கு எவ்வளவு அறிவும், கவனமும், தொழில்நுட்பமும், கருவித் தேவையும், ஆளுமைத் திறனும், பொறுமையும், ஈடுபாடும், ஊக்கமும் இன்னும் பலப் பல ஆற்றலும் தேவையாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். அப்படி எண்ணிப் பார்ப்பதற்கும் நமக்கு ஒர் அடிப்படை அறிவு தேவையன்றோ?

3. சொல்லுதல் எளிது செய்தல் கடினம்

செயல் என்பது கடினமானது மிகவும் கடினமானது. அதுவும் அந்தச் செயலைச் செப்பமாகவும், நுட்பமாகவும், திறம்படவும், அழகாகவும், உறுதியாகவும், தொடர்ந்து, நிலைப்பாடுறும்படியும் செய்வதானால், எவ்வளவு அறிவும் முயற்சியும் கடின உழைப்பும் தேவையாக விருக்கும். சொல்லுவது எளிது; மிகமிக எளிது. இவ்வுண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரிய வேண்டிய உண்மைகளுள் இதனையும் ஒன்றாக எடுத்துச் சொன்ன திருவள்ளுவர் அறிவை நாம் பாராட்ட வேண்டும் இல்லையா? பாராட்டுகிறோமோ இல்லையோ, அதை உணரவாவது செய்கிறோமோ? அவர் கூறிய உண்மை இது:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)

ஆம் சொல்லுதல் எளிது. யார்க்கும் எளிது. எல்லாரும் சொல்லலாம். அறிவுள்ளவனும் சொல்லலாம். அறிவு இல்லாதவனும் சொல்லலாம். தெரிந்தவனும் சொல்லலாம். தெரியாதவனும் சொல்லலாம். பார்த்தவனும் சொல்லலாம். கேட்டவனும் சொல்லலாம். நம்மேல் அன்புள்ளவனும் சொல்லலாம். அன்பு இல்லாதவனும் சொல்லலாம். எவரும் சொல்லலாம். ஆனால் செய்வதுதான் கடினம். அதுவும் தான் சொல்லியபடியே தானே செய்து காட்டுவதுதான் கடினம். கட்டிய வீட்டிற்குப் பழுதுரைப்பார் பலர் உழுத நிலத்தில் புரைசல் சொல்வார் பலர். ஆனால், வீடு கட்டுவதும், நிலம் உழுவதும் சொல்வது போல எளியன அல்ல. அவை செயல்கள், கடினமானவை. அதுவும் மேற்கண்ட குறளில் சொல்லியவண்ணம் செயல் அரியவாம் என்று திருவள்ளுவப் பெரியார் கூறியதில் தான் சொல்லியபடி தானே செய்தல் அரிது என்னும் குறிப்பையும் வைத்துள்ளது கவனிக்கத் தக்கது. சீர்திருத்தம் பேசுகிறவர்கள் அனைவரும் அவர்கள் சொல்கிற சீர்திருத்தத்தை அவர்களே சொல்லியபடி செய்வதானால் உலகம் எவ்வளவு விரைவில் செப்பமடையும். இந்த நிலையில் செயற்கரிய செய்பவர் பெரியார்தாமே! (26) பெருமையுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமையுடைய செயல் (975) என்று திருவள்ளுவப் பேராசான் கூறியது சரிதானே!