பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

செயலும் செயல் திறனும்



(ஆயுதம்) என்பது ஒரு பழமொழி இல்லையா? இது வல்லவனுக்குக் கூட ஒரு கருவி தேவையே என்பதையும் சுட்டுகிறது.

அடுத்து, தம் கையிலுள் கருவிகளைப் பற்றிச் சிலர் கவலைப்படுவதே இல்லை. மாணவர்களின் கைகளில் உள்ள கரிக்கோல்கள் (Pencil) பெரும்பாலும் மொக்கையாகவே இருக்கும். ஆசிரியர் ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் பொழுதுதான், சிலர் கரிக்கோலைச் சீவுதற்கு மழிதகடு (Blade) எடுப்பார்கள். அல்லது பக்கத்து மாணவர்களிடம் கேட்பார்கள். அல்லது தங்களிடம் தூவலில் (Pen) உள்ள முள்ளின் முனை சரியாயிருக்காது. சில கிறுக்கும், சில பட்டையடிக்கும். சில தூவல்களில் உள்ள நாக்குகள் சரியாய் இரா. அதனால் மை கொட்டும். சிலவற்றில் கழுத்து மறைகள் சுழன்று கொண்டே இருக்கும். அதனால் மை கசிந்து, கையெல்லாம், சட்டைப் பையெல்லாம், அல்லது பொத்தகப் பையெல்லாம், இன்னுஞ் சொன்னால் பொத்தகம், எழுது சுவடிகளிலெல்லாம் மைக் கறையிருக்கும். சிலரிடம் நல்ல தூவலாய் இருந்தாலும் உள்ளே மை இருக்காது, சிலரிடம் மை இருந்தாலும் அது தண்ணிர் மையாக இருக்கும். எழுதினால் எழுத்துச் சரியாய்த் தெளிவாய்த் தெரியாது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன: நாம் நமக்குத் தேவையான கருவிகளைப் பற்றிச் சரிவர கவனம் செலுத்தாததைத்தான்!

இனி, மாணவர்களின் நிலைதான் இப்படி என்று நினைக்க வேண்டா. தொழிலாளர்கள், குடும்பத்தவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் முதலிய அனைவருடைய நிலையினும் இக்குறைபாடுகள் உண்டு. அவற்றை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

7. கருவியை கையாளச் செய்தல்

அம்மா அடுப்பு ஊதும் ஊதாங்குழல் நெளிந்து, நசுங்கியிருப்பதால் சரியாகக் காற்று வராது. அடுப்பின் குமிழ்கள் தேய்ந்து போய், அதன் மேல் வைக்கின்ற ஏனங்கள் சரிவரப் படியாமல் ஆடிக்கொண்டு இருக்கும். அகப்பை தேய்ந்திருக்கும். அல்லது அது கைப்பிடிக் கம்பிலிருந்து எளிதே கழன்று கொள்ளும்படி தளர்ந்து இருக்கும். குழம்பை மொள்ளும் பொழுது அகப்பை அதிலேயே விழுந்துவிடும் கம்பு மட்டும் கையில் வரும். வீட்டில் உள்ள மின்சாரச் சொடுக்கி (Switch) தொள தொளவென்று இருக்கும். மின் விசிறி முடுக்கப் பெற்ற ஆணிகள் தளர்ந்து அது சுழலும் பொழுது தடதடவென்று ஒலி வரும். நாம் ஒட்டும் மிதிவண்டியில் உள்ள பல வகைக் கோளாறுகளை நாம் முன்னெச்சரிக்கையாகக் கவனிக்காமல் இருப்போம்.

உந்து வண்டி ஒட்டுநர் உந்துவண்டிகளைச் சரியாகக் கண்காணிக்காமையால்தானே, பல சமயங்களில் பல வண்டிகள்