பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

87



ஒரு வினையைத் தொடங்குவதற்கு ஏற்ற காலம் என்பது முழுமையாக, நாம் எடுத்துக் கொண்ட வினையையே பொறுத்தது. நாம் செய்ய எடுத்துக் கொண்ட வினை என்ன? அதால் யார்யார்க்கு எத்தகைய வகையில் எவ்வளவு பயன் கிடைக்கும்? அதற்கு யார் யாரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அந்த வினை செய்வதற்குப் பொருத்தமான சூழ்நிலையைக் காலத்தாலும் இடத்தாலும் முடிவு செய்ய வேண்டும். அதற்கு, அவ்வினை செய்ய வேண்டிய கால கட்டாயத்தை முதலில் உறுதி செய்ய வேண்டும். செய்யப் பெற வேண்டிய வினை அந்தக் காலச் சூழலுக்குப் பொருத்தமானதா, அந்த இடத்திற்குப் பொருத்தமானதா என்று ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையே அவ்வினைக்கு இயைந்த சூழ்நிலை என்று முடிவு செய்து கொள்ளுதல் வேண்டும். அந்தச் சூழ்நிலை இயையுமானால், அதுவே அதற்கேற்றது என்று தெரிவு செய்தல் வேண்டும். நம் வினைக்கு அது வந்து பொருந்துமானால், அதுவே அதற்கேற்றது என்று தெரிவு செய்தல் வேண்டும். நம் வினைக்கு ஒரு பெருத்த முதலீடு தேவைப்படுவதாயின், அம் முதலீடு நமக்கு வந்து வாய்க்கும் காலமே, சூழலே அதற்கேற்ற காலம் ஆகும். அல்லது, அதற்குரிய கருவிகள் நமக்கு வந்து வாய்க்குமானால் அதுவே அதற்கு ஏற்ற காலம் என்றும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அல்லது அவ்வினைக்குரிய துணைவர்கள் வந்து பொருந்துவார்களானால், அதுவே அவ்வினைக்குத் தக்க காலம் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு வினைக்குரிய, தேவையான பொருள், கருவி, துணை என்னும் மூவகைக் கூறுகளில் ஒன்றோ இரண்டோ, தானாக, அல்லது தாமாக வந்து பொருந்தும் காலமே அவ்வினை தொடங்குவதற்கு ஏற்ற காலம் என்று துணிதல் வேண்டும்.

இவற்றுள் நாம் எடுத்துக் கொண்ட வினைக்கு ஒன்று பொருந்தும். ஒன்று பொருந்தாமல் இருக்கும். அஃதாவது நம் வினைக்கேற்ற பொருள் கிடைத்திருக்கும். கருவிகள் கிடைக்கா, கருவிகள் கிடைக்கும். ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். இனி, பொருளும் கருவியும், ஆள்களும் கிடைத்திருக்கும். ஆனால், அவ்வினை தொடங்குவதற்கு அந்தச் சூழ்நிலை பொருத்தமில்லாமல் போகும். அந்நிலையிலும் அவ்வினையைச் செய்ய நாம் துணிந்து விடக்கூடாது. அஃதாவது நாம் வெல்ல வாணிகம் செய்யவிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய முதலீடும், கடையும் கருவிகளும், போதிய ஆட்களும் இருக்கலாம். ஆனால் அது மழைக்காலமாக இருக்கும். அந்தக் காலச் சூழ்நிலை நம் வெல்ல வாணிகத்திற்கு ஏற்றதாக அமையாதன்றோ? எனவே, அந்நிலையில் பருவக் காலமே நமக்கு ஏற்றமென்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்.