— இறுதிப் பகுதி
தமிழ் மொழியிலுள்ள சிறந்த காப்பியங்கள் என்று சொல்லப் பெறுபவை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், சாத்தனாரின் மணிமேகலை, திருத்தக்கதேவரின் சிந்தாமணி, கம்ப நாடனின் இராம காதை, சேக்கிழாரின் பெரிய புராணம் ஆகிய ஐந்துமாகும். இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை வரலாற்று அடிப்படையில் தோன்றியவை என்று கூறுவதற்கில்லை. மிகப் பழங்காலத்தில் இந்த நாட்டில் வழங்கிய அடிப்படைக் கதைகளை மூலமாகக் கொண்டு, இவை இயற்றப் பெற்று இருக்கலாம். தேவரின் சிந்தாமணி வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் காணப் பெறும் ஒரு மாமனிதனின் வரலாற்றை கூறுவதாகும். அடுத்தபடியாக உள்ள கம்பனுடைய இராம காதை வால்மீகியை அடிப்படையாகக் கொண்டு, ஆனால் அதே நேரத்தில் தமிழ் மரபுக்கேற்றபடி செய்யப் பெற்ற ஒரு காப்பியமாகும். பெரிய புராணம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பெரிய புராணத்தைப் பொறுத்த மட்டில், அதில் சொல்லப்பட்ட அடியார்கள் அனைவரும், வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு முடிய வாழ்ந்தவர்கள் ஆவர். இந்தத் தமிழக எல்லையில் வாழ்ந்த அந்த அடியார்களைப் பற்றி சுந்தரமூர்த்தி