123
இந்த ஒவ்வொரு சருக்க முடிவிலும் புராணத் தலைவராகிய சுந்தரர் வரலாறு மறவாதிருத்தற்காக அவரைப் பற்றிய செய்யுள் ஒன்றைச் சேக்கிழார் பாடியிருத்தல் கூர்ந்து கவனிக்கத் தக்கது. இங்ஙனம் எல்லாச் சருக்கங்களும் சுந்தரர் வரலாற்றால் இணைப்புண்டு ஒரு தலைவனைப் பற்றியே பேசும் பெருங்காவியமாகப் பெரிய புராணம் திகழ்கின்றது. சேக்கிழார், இக்கருத்துக் கொண்டே சங்கிலி கோத்தாற் போலச் சுந்தரர் வரலாற்றை ஒவ்வொரு சருக்கத்துடனும் இணைத்திருத்தல் கண்டு வியக்கத்தக்க ஒன்றாகும்.
3.நாற்பொருள். சுந்தரர் வரலாற்றிலும் அவராற் சுட்டப் பெற்ற நாயன்மார் வரலாறுகளிலும் சத்துப் பொருள்களாக விளங்குபவை அறம், பொருள், இன்பம், வீடேயாகும். -
4. மலை, கடல் முதலியன. மலைநாட்டு வளம் கண்ணப்பர் புராணத்துள் பண்படப் பேசப்பட்டுள்ளது. கடல் வளம் அதிபத்தர் புராணத்துள் கூறப்பட்டுள்ளது. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், சேரமான் பெருமாள் புராணம் முதலிய பல புராணங்களில் சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாட்டு வளங்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளன. நகரச்சிறப்பில் திருவாரூரும், திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் காஞ்சியும், பிற இடங்களிற் பிற நகரங்களும் (மதுரை முதலிய பழம்பதிகள்) பாராட்டப்பட்டுள்ளன. பெரும் பொழுதுகளான கார்காலம். குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பணிக்காலம், இளவேனிற் காலம், முதுவேனிற்காலம் என்பன. அப்பர். சம்பந்தர், சுந்தரர் வரலாறுகளிற் குறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனமே காலை, நண்பகல், மாலை முதலிய சிறு பொழுதுகள் ஆறும் ஆங்காங்குப் பேசப்பட்டிருக்கின்றன.