பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

101

VII மன்னர் பாஸ்கர சேதுபதி (1888-1903)

துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகன் பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருந்தார். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அத்துடன் இராஜ குடும்பத்தைப் பராமரித்து வந்ததுடன் பாஸ்கர சேதுபதிக்கும் அவரது தம்பி தினகர சேதுபதிக்கும் கல்வி புகட்டும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். அதற்காக அந்தச் சிறுவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆங்கில ஆசான்கள். தாதிமார்கள், பணியாட்கள் ஆகியோரை அவர்களுக்கென நியமித்து முறையாகக் கல்வி பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர். கி.பி. 1888-ல் பாஸ்கர சேதுபதி சென்னை கிறுத்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரது 12 வருட நிர்வாகத்தில் பல கண்மாய்களும், நீர்ப்பாசன ஆதாரங்களையும் பழுது பார்க்க ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் சமஸ்தானத்தின் பல பகுதிகளுக்கும் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல்லக்கிலே பயணம் செய்து மக்களது வாழ்க்கை நிலையையும், தேவைகளையும் அறிந்து வந்தார்.

இவர் சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் சீமை சமஸ்தான கோவில்களில் ஆகம முறைப்படி வழிபாடுகளும் விழாக்களும் நடந்து வர ஏற்பாடு செய்தார்.

இந்த மன்னர் பொருள் வசதி குறைந்த ஜமீன்தார் அமைப்பு முறையிலே இயங்கி வந்தாலும் இவரது இதயம் அவரது முன்னோர்களைப் போன்று விசாலமானதாகவும் ஆன்மீகப் பணியில் பற்றுக் கொண்டதாகவும் அமைந்து இருந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது ஆகும். இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், இராமநாதபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியன திருப்பணி செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும், திருச்செந்தூர், பழனி, முருகன் ஆலயங்களிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும் உச்சி காலக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவைகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.