பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11-ம் அதி:—
செங்குட்டுவன் அரசியல்.

நம் சேராபெருமானது இராஜாங்கமுறைகளை இனி நோக்குவோம். பொதுவாகச் சொல்லுமிடத்து, செங்குட்டுவன் காலத்தனவாகிய சங்க நூல்களிலே அரசியன்முறைகளாக அமைந்தவை யாவும் நம் வேந்தனுக்கும் உரியவையென்றே சொல்லலாம். இவ்வாறு கூறப்பட்ட அரசியல்களை விடாது இங்கு விவரிப்பதாயின் இவ்வதிகாரம் அளவு கடந்து விடும். அதனால், வேற்று நூல்களுட் புகாமல், செங்குட்டுவன் சம்பந்தமான செய்யுள்களிலிருந்து தெரியவரும் விசேடச்செய்திகளை மட்டும் இங்கு விளக்குவோம்.

நம் சேரர்பெருந்தகை, சங்ககாலத்துத் தமிழ் வேந்தருள்ளே சிறந்து விளங்கியவன். இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும், அவன் முன்னோரும், வடவாரியருடனும் அயலரசருடனும் அடுத்தடுத்துப் போர்புரிந்து வந்தவராதலால், அவரது பகைமையெல்லாம் இவனுக்கும் இருந்ததென்றே தெரிகின்றது. அதனால், கடல் வழியாகவும் தரைவழியாகவும் பகைவர் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கேற்ற கப்பற்படையும் தரைப்படையும் இவன் உடையனாகவேயிருந்தான்.

“சினமிகு தானை வானவன் குடகடற்
பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப்
பிறர்கலஞ் செல்கலர் தனையேம்” (புறநா. 126.)

என, மாக்கலப்படையின் மாட்சியால் கடற்றலைமையை அக்காலத்துச்செங்குட்டுவன் வகித்திருந்த சிறப்பைப் பெயர்