பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 105



நெடுஞ்சேரலாதன் இளமையில் முரஞ்சியூர் முடிநாகனார் பால் கல்வி பயின்றவன். அவரும் பிறருமாகிய சான்றோர் வேந்தர்களை வாழ்த்தும்போது “பொதியமும் இமயமும் போல நிலைபெறுக” என வாழ்த்துவது மரபாக இருத்தமை அவனுக்குத் தெரிந்திருந்தது. நெடுஞ்சேரலாதன் அதன் கருத்தை ஆராய்ந்தான். தென்பொதியத்து வேளிர் சேரவேந்தர்க்கு மகட்கொடை புரியும் முறைமையினராதலால், அவரது பொதியத்துக்கும் சேரர்கட்கும் தொடர்புண்டு என்பது இனிது விளங்கிற்று. பொதியம் போல வட விமயமும் சேரவரசரோடு தொடர்புற வேண்டும் என்பது அச் சான்றோர் கருத்தாதலைக் கண்டான். சேர நாட்டின் தென்பகுதியை வென்று ஞாயிறு தன் கடலில் தோன்றித் தன் கடலிலே குளிக்கும் என்று சான்றோர் பரவும் பாராட்டினைத் தன் தந்தை உதியஞ்சேரல் பெற்றான்; அதற்கு முன்னோருள் ஒருவன் பாரதப் போரில் பெருஞ்சோற்று விழாவினைச் செய்துகாட்டிச் சிறப் புற்றான்; அவருள் வேறொருவன் குடநாட்டிற்குக் கிழக்கில் சுவர்போல் வானளாவி நிற்கும் பாயல் மலையின் வடக்கில் விளங்கும் வானமலையைத் தனக்குரியதாக்கி வானவன் என்ற சிறப்பும் வானி யாற்றையும் வானமலையையும் வடக்கில் வரம்பறுத்து வானவரம்பன் என்ற சிறப்பும் பெற்றான்; ஆகவே சான்றோர் விழைந்தவண்ணம் இமயத்தைத் தன் புகழ்க்கு எல்லையாக்குதல் வேண்டும் என்று நெடுஞ் சேரலாதன் நெஞ்சில் வேட்கைகொண்டான்.