பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 சேர மன்னர் வரலாறு



அவனுடைய மறவர்கள் போர்வேட்கை மிக்கிருந்தனர் மறவர் உடன்வரச் சென்று சேரமான் பகைவர் திரளைச் சவட்டலுற்றான். போர்க் களிறுகளும் வயமாவும் உடல் துணிந்து வீழ்ந்தன; மறவர் பலர் மாண்டொழிந்தனர். போர்க்களம் பனைதடி புனம்போலக் காட்சி நல்கிற்று, பெருகியோடிய குருதிப் பெருக்குப் பிணந்தின்னும் கழுகின் சேவலும் பெடையும் பருந்துமாகியவற்றை அலைத்துக்கொண்டு சென்றது; கூளிக்கூட்டம் நிணம் தின்று கூத்தாடிற்று; வெற்றி மிகக்கொண்ட சேரலைக் காப்பியனார் கண்டு, “வேந்தே, இத்தகைய செருப் பல செய்து சிறக்கும் நின்வளம் வாழ்க[1]” என வாழ்த்தினர்.

இவ் வண்ணம் கடும் போர்களைச் செய்யும் முகத்தால் சேரமானது பகைவர் மிக்க துயரத்தை எய்தினர்; ஆனால், பரிசிலர்க்குப் பெரும் பொருள் நல்கப்பட்டது. வேந்தன்பால் இவ்வாற்றால் மறவேட்கை மிகாது அடங்கியிருந்தது. ஆன்றவிந் தடங்கிய அவனது செம்மைப் பண்பு கண்டு வாய்மொழிப் புலவர் மனமகிழ்ந்து அவனுடைய “வளனும் வாழ்க்கையும் சிறப்புறுக” என வாழ்த்தினர். நார்முடிச்சேரலது நல்வளமும் நல்வாழ்க்கையும் துளங்கிய குடிகட்கு வளம் தந்தன; பகைவர் எயிலை யிழந்து அவர் நாட்டு நன்மக்களோடு ஒப்பப் பேணிப் புறந்தந்தான். இதனைக் கண்ட காப்பியனார், வேந்தே, நின்னுடைய இச் சீரிய வாழ்வு உலகிற்கு மிக்க நலம் தருவதாகும். நல்லரசும் அறவாழ்வும் திருந்திய முறையில் நிலவச் செய்வதே


  1. பதிற். 36.