230 சேர மன்னர் வரலாறு
புகழ் படைத்து விளங்கினான். அவன்பால் பெரு நட்புற்று ஒழுகிய தமிழ்ச் சான்றோருள் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் தலைசிறந்தவர். அவர் அடிக்கடி ஆய் அண்டிரனைக் கண்டு அவன் புகழ் நலங்களை இனிய பாட்டுக்களாற் பாடி இன்புறுத்தியும் இன்புற்றும் வந்தார். மோசியாருடைய புலமைவளம் தமிழ் வேந்தர் மூவருக்கும் நன்கு தெரிந்திருந்தது.
முடமோசியார் ஆய்குடியல் இருந்து வருகையில் அந்துவஞ்சேரலைக் காண விரும்பி அவனது வஞ்சி நகர்க்குச் சென்றார். அவருடைய வரவு கண்ட சேரமான், அவரை அன்போடு வரவேற்றுச் சிறப்பித் தான். அப்போது, சேரமானுக்கும் சோழ வேந்தனான முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத் தாலோ பகைமையுண்டாயிற்று. ஆதலால், சோழன் தன் பெரும் படையுடன் போந்து வஞ்சி நகர்ப் புறத்தே முற்றியிருந்தான். சேரருடைய வஞ்சியும் அதற்கு வடக்கில் கடற்கரையில் உள்ள கருவூரும் சேரர் பெரும்படையின் திண்ணிய காவலில் இருந்தன. வஞ்சிநகர்ப் புறத்தே, இரு படைகளின் செயல் வகைகளை இனிது காணத்தக்க வகையில் உயர்ந்த மாடங்கள் அமைந்த அரண்மனை யொன்று இருந்தது. அதற்கு வேண்மாடம் என்பது பெயர். மகட்கொடை வகையால் நெருங்கிய தொடர் புற்றிருந்த வேளிர் தலைவர்களால் அம் மாடம் நெடுங்காலத்துக்கு முன்பே அமைக்கப்பெற்றது. வேணாட்டு அரசரும் அரசியற் சுற்றத்தாரும் வரின், அவர்கள் தங்குதற்கென அது நிறுவப்பெற்றது. கண்ணகியார்க்குக் கோயில் எடுத்துக்