பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/372

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370 சேர மன்னர் வரலாறு



புலவர் பெருமான் வரவு கண்ட சோழன் மிக்க சிறப்புடன் வரவேற்று அவர் மனம் மகிழத் தகுவனவற்றைச் செய்தான். அவர், செங்ணான் சேர நாட்டுக் கழுமலத்திற் செய்த போரைச் சிறப்பித்துக் களவழி என்னும் நாற்பது பாட்டுக்கொண்ட நூலைச் செய்து சோழன் திருமுன் பாடினார். அமிழ்தம் பொழியும் அவரது தமிழ் நூல் வேந்தர் பெருமானுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அவன் அவர்க்குக் களிறும் மாவும் பொன்னும் பொருளும் பரிசிலாக நல்கினான். ஆனால் பொய்கையார் செங்கணானைத் தொழுது, “வேந்தே, பொன்னும் பொருளுமாகிய பரிசில் வேண்டி வந்தேனில்லை ; யான் வேண்டுவது வேறு பரிசில்; அரசு காவலின்றி அலமரும் சேர நாட்டுக்கு உரிய வேந்தனைப் பெறுதலினும் யாம் விழையும் பேறு வேறு இல்லை . மக்களுயிரின் இன்ப வாழ்வுக்கு நிலைக்களமாகிய நாட்டை மக்கள் தமது உயிரிழந்து வருந்தும் பிணக் களமாக்கும் வல்லரசு ஒழிதல் வேண்டும். அதற்கு ஆவன செய்வதே யாம் பெறும் பரிசில். இதனைக் கருப்பொருளாகக் கொண்டதே என்று இக் களவழி நூல்; அந்த நாட்டிற்கு உரியவனை அரசனாக்குவதே யான் வேண்டும் பரிசில்” என்றார். செங்கணான் பொய்கை யாரது புலமை நலம் கண்டு பேருவகை கொண்டு தன் அரசியற் சுற்றத்தாரை விடுத்துச் சேரமானைச் சிறை வீடு செய்து, மீள அவனைச் சேரமானாக்கி வருமாறு பணித்துப் பொய்கையாருக்கு மேலும் பல பரிசில் நல்கி விடுத்தான்.