80 சேர மன்னர் வரலாறு
சிறப்புடைய ஊர் என்று பெரிபுளுசு என்னும் நூல் கூறுகிறது[1]. சங்கத் தொகைநூற் பாட்டுகளும் இதனைப் பல்வகையாலும் பாராட்டிக் கூறுகின்றன. இவற்றின் வேறாக மாந்தை, மரந்தை என நகரங்கள் சில கூறப்படுகின்றன. அவற்றின் நலங்கள் வருமிடங்களில் ஆங்காங்கே விளக்கப்படும்.
திருவிதாங்கூர் நாட்டு எட்டுமானூர், அம்பலப் புழை, செங்கணாசேரி, கோட்டயம் என்ற பகுதிகளும், கொச்சி நாட்டுப் பகுதியும், பொன்னானி தாலூகாவின் குட்ட நாட்டுப்பகுதியும் ஒன்றுசேர்ந்த பகுதி குட்டநாடு என இப்போதும் வழங்குகிறது. இதன் வடக்கில் பொறை நாடும், கிழக்கில் பூழிநாடு கொங்கு நாடுகளும், தெற்கில் தென்பாண்டி நாடும், மேற்கில் கடலும் எல்லைகள் . இந்த நாட்டில் பெரியாறும், அதன் கிளைகளான பொருநை சுள்ளி யென்ற ஆறுகளும், பொன்வானி யாறும், வேறு பல சிற்றாறுகளும் பாய்தலால் இந்நாடு நல்ல நீர் நிலவளம் சிறந்துளது. இது தெற்கிலுள்ள நாஞ்சினாடு போல மிக்க நெல் விளையும் நீர்மையுடையது. திருவிதாங்கூர் அரசுக்குட்பட்ட குட்ட நாட்டுப் பகுதி மட்டில் இரு நூறாயிரம் ஏக்கர் நிலம் நெல் பயிரிடத்தக்க வகையில் அமைந்துள்ளது என்பர்.[2] அண்மையில் நிற்கும் மலைமுடிகளிற் பெய்யும் மழை நீர் இழிந்து விரைந்தோடி வந்து கடலில் மண்டுங்கால் கடற்கரை உடைந்து குட்டங்கள் (காயல் என இக் காலத்தில் வழங்கும் கானற்