திருஞானசம்பந்தர்
69
பொருளாராய்ச்சி
இங்ஙனம் இனிய தமிழால் திருப்பதிகங்கள் பாடலுற்ற திருஞானசம்பந்தர், அத்திருப்பதிகங்களைப் பொதுவாகச் “செந்தமிழ்”[1] “ஒண்டமிழ்” [2] “விலையுடைய அருந் தமிழ்”[3] “இன்தமிழ்”[4] “பூந்தமிழ்”[5] என்று கூறுவாராயினும், அவற்றின் சிறப்பும் விளங்க, “திருநெறியதமிழ்”[6] “அருள்மாலைத் தமிழ்”[7] “மறையிலங்கு தமிழ்”[8] “தவம் மல்குதமிழ்”[9] “மறைவளரும்தமிழ்”[10] “பொய்யிலிமாலை”[11] “அளிதருபாடல்”[12] என எடுத்தோதுகின்றார். சில திருப்பதிகங்கட்குத் தாமே பெயர் கொடுத்து “பல்பெயர்ப் பத்து”[13] “இன்னிசை” [14] “ஏழிசைமாலை”[15] “பூம்பாவைப் பாட்டு”[16] “பாசுரம்”[17] என்று இயம்புகின்றார். இப்பதிகங்களை ஓதும் முறையையும் ஓதியவழி எய்தக்கூடிய பயன்களையும் பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யுளில் தவறாமல் கூறியுள்ளார். “காழிநாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய்நவிற்றிய தமிழ்மாலை, ஆதரித்திசை கற்றுவல்லார்சொலக் கேட்டு உகந்தவர்தம்மை வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந்து அடையாவே”[18] எனவும் கூறுகின்றார்,
இனி, அந்தணர் முதலிய நால்வகை மரபினருக்கும் தனித்தனி மாலை கூறுவது தமிழ் நூல்களின் இயல்பு. அவ்வகையில் அந்தணருக்குத் தாமரைப்பூவை மாலையாகக் கூறுவர். திருஞானசம்பந்தர் அந்தணராதற்கேற்பத் தாம் தாமரைப்பூ மாலை அணிவது இயல்பென்பதை, “கமலத் தார்மிகுந்த வரைமார்பன் சம்பந்தன்”[19] என்று குறித்துள்ளார்.