பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சைவ இலக்கிய வரலாறு

வாழலாம் வைகலும், எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை"[1] எனவும் கூறுதல் காண்க.

இன்ப நாட்டமும் அதனைப்பெறும் முயற்சியுமேயுடைய உயிர்கட்குத் தடைசெய்வன அவ்வுயிர்கள் செய்யும் வினைகளே என்பது சமய தத்துவ நூல்கள் கூறும் கொள்கை. இவ்வினைகளை, உயிர்கள் நுகர்ந்து கழித்தாலன்றி அவை நீங்கா:வினையாகிய பகையை வெல்லும் பொருள் யாதும் இல்லை யென்பது சமணம், பெளத்தம் மீமாஞ்சை முதலிய சமயங்களின் முடிபு. ஞானசம்பந்தர், அம்முடிபை மறுத்து, இறைவழிபாட்டால் இவ்வினைப்பகையும் கெடும்; இறைவன் திருவருள் ஒளியின்முன் வினயாகிய இருள் நிலையின்றிக் கெட்டொழியும் என்று தெருட்டுகின்றார்.

இவ்வினைகள் உளவாதற்குக் காரணம் உயிர்களை அனாதியே பற்றி நிற்கும் மலம் என்பது சைவசமய அறிவு நூன்முடிபு. மலத்தின் தொடர்பு அறுவதே வினைக் கட்டினின்றும் வீடுபெறுவதற்கு வழியாகும், இம்மலத்தின் மறைப்பு, இறைவன் வழிபாட்டால் நீங்குமெனத் திருஞான சம்பந்தர் அறிவுறுத்துகின்றார். இம்மலகன்மங்களைப் பாசம் என்பது சைவநூல் வழக்கு. அதனையும் ஞான சம்பந்தர் மேற்கொண்டு, "ஈசன் முதுகுன்றை நேசமாகி நீர், வாசமலர் தூவப் பாசவினை போமே!”[2] எனவும், "பாசமறுப்பீர்காள், ஈசன் அணியாரூர், வாசமலர் தூவ, நேசமாகுமே"[3] எனவும் கூறுகின்றார்,

வரலாற்றுக் குறிப்புக்கள்

இனி, ஞானசம்பந்தர் காலத்தில் நாட்டில் இறைவன் அருட்செயலை விளக்கும் புராண வரலாறுகள் பல நிலவிய குறிப்பை ஆங்காங்குக் குறித்துள்ளார். கணபதியையும்[4] முருகனையும்[5] பற்றிய வரலாறுகளும், உபமன்னியுவுக்குப்-


  1. ஞானசம். 282:1.
  2. ஞானசம். 93 : 4.
  3. ௸ 91:6
  4. ௸ 123:5
  5. ௸ 198:1,199:6, 209:1.