பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 2 (பசு) - 151 சூக்குமப் பொருள் என்பதையும் உயிர் தூலப்பொருள் என்பதையும் அறிவோம். அதனால் இறைவனது அறிவு இச்சை செயல், ஆகியவை சூக்குமமுடையவை, உயிரினது அறிவு இச்சை செயல்கள் துலமுடையவை. ஆகவே, உயிரினும் தூலமாகிய ஆணவம் உயிரின் இச்சை செயல் களைப் பற்றுமேயன்றி இறைவனது இச்சைசெயல்களைப் பற்றாது என்பதை நாம் உளம் கொள்ளல் வேண்டும். ஆகவே, ஆணவமலத்தால் பற்றப்பட்டு வலியிழந்து கிடக்கும் ஆன்மாவினது இச்சைசெயல்களை இறைவனது இச்சைசெயல்கள் பெத்தகாலத்தில் மாயை கன்மங்களின் வழியாகவும் முத்தி காலத்தில் நேரேயும் செயற்படுத்தி நிற்கும் என்று முன்னர்க் கூறியதை நினைவு கூரலாம். இங்ங்னம் இறைவனது சக்திகள் என்றும் தூயனவாயும் செயற்படுத்துவனவாயும் உள்ளன. ஆயினும், ஆன்மாவினது சக்திகள் அநாதியே மாசுபடிந்தனவாயும் இறைவனது சக்திகள் செயற்படுத்தும் அளவிற்குச் செயற்படுவனவாயும் உள்ளன என்பது அறிந்து தெளியப்படும். இதனால் இம்மூன்று சக்திகளை உடைமை மாத்திரையில் ஆன்மா இறைவனோடு ஒருநிகராதல் இல்லை என்பது அறியப்படும். ஆயினும், ஆன்மா அறிவுடைப் பொருளாதலின், இறைவனோடு சிறப்பு வகையில் தொடர்பு கொள்ளுவதற்குரிய இனப் பொருளாகும். ஆனதுபற்றியே ஆன்மா என்னும் பெயர் இரண்டற்கும் பொதுப் பெயராயிற்று என்பதும் அறியப்படும். அப்பெயரைப் பொதுமை நீக்கிக் கூறினால் பரமான்மா, சீவான்மா என்றாகின்றது. எனினும் ஆன்மா என்பது சீவான்மா வையே குறிப்பது எங்கணும் பெருவழக்காக உள்ளது. உயிர் இறைவனுக்கு இனப்பொருள். எனவே பாசங்கள் இனமல்லாத பிறபொருள் என்பது தானே விளங்கும். -