பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சொன்னால் நம்பமாட்டீர்கள்



நானோ மலை அவரோ துரை. மலையிலிருந்து தான் நீர் வீழ்ச்சி வருகிறது. அது துறையில்தான் தங்குகிறது. இந்தத் துறையில் ர. தவறிக் கிடக்கிறது. இதைப் போல அண்ணாவின் கொள்கைகள் தவறிக் கிடக்கின்றன. ‘திராவிடநாடு’ என்று அவர் சொல்வதெல்லாம் ஒரு நாளும் நடக்காத காரியம்.

அதற்காக அவர் செய்யும் முயற்சி, செலவிடும் நேரம் எல்லாம் வீண். அவரது சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளில் பல எனக்கு உடன்பாடுடையவை. ஆனால் அவரது அரசியல், அபத்தம் என்பது எனது உறுதியான கருத்து. நல்ல வேளை, இந்த வேலைக்காரி படத்தில் அவரது சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே புகுத்தி இருக்கிறார்.

அரசியல் வாடை இல்லை. நமது சமூகத்தை சீர்திருத்தச் செய்யவேண்டுமென்றால் நூறு வேலைக்காரி படம் வந்தாலும் சிரமம்தான். சட்டத்தின் மூலமே நமது சமூகத்தை சீர்திருத்த முடியும்.

ஜனநாயக யுகத்தில் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு மாறாகச் சட்டம் செய்தால் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமே! அதனால் வேலைக்காரி போன்ற படங்கள் மக்களின் மனோநிலையைப் பக்குவப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்யும்.

சிறிது சிறிதாகத்தான் ஜனநாயகத்தில் சமூக சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டுவர முடியும். ஆகவே அண்ணாவின் வேலைக்காரி நூறு நாள் ஓடியதை நான் வரவேற்கிறேன். அண்ணாவை மனதாரப் பாராட்டுகிறேன,” என்று பேசினேன்.

பின்னர் அண்ணா பதில் கூறும்போது சிறிதும் முகம் சுளிக்காமல், சின்ன அண்ணாமலை பல தியாகங்கள் செய்தவர். புரட்சி செய்து சிறைக் கதவுகளை மக்கள் உடைக்க விடுதலையானவர்.