இந்நூலை நான் எழுதுவதற்குத் துண்டுகோலாக இருந்தது “குமுதம்” பத்திரிகையே.
“குமுதம்” பத்திரிகை “போனஸ் வெளியீடாகச் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டபோது, என் வாழ்க்கையில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களைத் தொகுத்து எழுதும்படி பணித்தார்கள். அதற்காகச்சில சம்பவங்களை எழுதிக்கொடுத்தேன். “குமுதம்” போனஸ் வெளியீடாக வந்தபோது பலரும் படித்துப் பாராட்டினார்கள்.
அதைப்போல இன்னும் பல சம்பவங்கள் என்வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அவைகள் பலவற்றையும் தொகுத்து எழுதியபோது அது ஒரு பெரிய நூலாக வடிவெடுத்து உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறது.
ஒரு எளிய தொண்டனின் வாழ்க்கையில் நடைபெற்ற சில விசித்திரச் சம்பவங்களின் தொகுப்புத்தான் இந்நூல். படிக்க சுவரஸ்யமாக இருந்தால் அது போதும். அச்சாகும்போதே படித்துப் பார்த்த சில மேதைகள், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
அது முகஸ்துதி அல்ல, உண்மை என்றே நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
பிப்ரவரி, 1978,
சின்ன அண்ணாமலை