பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“தொல்காப்பியம் மிகச்சிறந்த நூல்“

“தமிழுக்கு இதுவே முதல் நூல் ஆகும் இதைப் போன்ற நூல் வேறு எந்த மொழியிலும் கிடையாது.”

இந்த மாதிரி பொதுப்படையாகவே பேசிக் கொண்டு போனேன். நான் மேலே கூறியவைகளை யார் மறுக்க முடியும், இதற்கு மேல் தொல்காப்பியத்தைப் பற்றி ஓங்கி ஒரு அடி அடித்தேன். அதாவது ‘தொல்காப்பியத்தில் 11 சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன.’

இதை நான் சொன்னதும் சபை அசந்து விட்டது. “ஆகா, என்ன ஆராய்ச்சி” என்ன ஆராய்ச்சி, என்று பலர் வியந்தனர்.

இப்படியாக என் துவக்க உரை முடிந்தது.

அதன் பிறகு பேசிய ஒவ்வொருவரும் என்னைப் பார்த்து ‘தமிழ்க்கடலே’ என்றும் ‘ஆராய்ச்சி அருவி’ என்றும் ‘புலவர் சிகாமணி’ என்றும் புகழ்ந்துரைத்தனர். ஒரு புலவர் பேசும்போது, துவக்க உரை நிகழ்த்திய தமிழ்ப் பெருந்தகையாளர் தொல்காப்பியத்தில் 11 சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதாகக் கூறினார்கள்.

நான் ஆராய்ந்த வரையில் 7 வார்த்தைகள்தான் இருக்கின்றன.பாக்கி நான்கு வார்த்தைகள் என்ன என்பதை அறிய மிக ஆவலாக உள்ளேன் என்று போட்டார் ஒரு போடு.

எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. ஆகா வசமாக மாட்டிக் கொண்டோம். இதிலிருந்து எப்படித் தப்புவது? என்று நான் விழித்துக் கொண்டிருக்கையில் வேறு ஒரு புலவர் மேடைமீது பேச வந்தவர், “நான் ஆராய்ச்சி செய்தவரையில் தொல்காப்பியத்தில் 14 சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன” என்று என் காதில் தேன் வந்து பாய்வதுபோல் சொன்னார்.