பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சொன்னால் நம்பமாட்டீர்கள்



நான் உடனே ஐயா இது என் விஷயம் மட்டுமல்ல, தமிழ் நாடு பூராவும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த மாதிரி அவஸ்தைக்குள்ளாகி இருக்கிறார்கள். அதற்கு மொத்தமாக நாம் கட்சி ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும்.

போலீஸ் நடவடிக்கை இதற்கு நிரந்தர பரிகாரமாகாது. என்றேன். “என்னசெய்யலாம், சொல்லுங்க” என்றார். “திராவிடத் கழகத்தை எதிர்த்து ஒரு இயக்கம் நடத்தினால் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய தெம்பு உண்டாகும். கட்சிக்கும் புதிய பலம் உண்டாகும்” என்றேன்.

ஒரு கட்சியை எதிர்த்து இயக்கம் நடத்துவது, அரசியல் ரீதியாகசரியாகச் இருக்காதே, திராவிடக் கழகம் பிரிவினைக் கட்சிதானே அதனால் “பிரிவினை எதிர்ப்பு இயக்கம்” என்று நடத்தினால் என்ன?” என்று கேட்டார்.

“பிரிவினை எதிர்ப்பு” என்று நடத்தினால் பரபரப்பு இருக்காது. “திராவிட இயக்க எதிர்ப்பு” என்று நடத்தினால்தான் பரபரப்பு இருக்கும்” என்று சொன்னேன்.

“சரி, அப்படியானால் உடனே வேலையைத் தொடங்குங்கள்,” என்று சொல்லி ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு போன் செய்து, எனக்கு ஒரு செவர்லட் வான் ஒன்றைக் கொடுக்கும்படியும், டிரைவர் ஏழுமலை என்பவரை வண்டியை ஓட்டும்படியும் ஏற்பாடு செய்தார்.

“டிரைவர் ஏழுமலை சிறந்த காங்கிரஸ் தொண்டர். உணர்ச்சி உள்ளவர். கலகம் வந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியவர்” என்று காமராஜ் சொன்னார். மேலும், பிரிவினை எதிர்ப்பு என்றால் நானே தலைமை வகித்து இயக்கத்தை நடத்தலாம்.